Thursday, February 14, 2008

வியக்க வைத்தது!

COMPANY - இது ஒரு ஹிந்தித்திரைப்படம். 2002 ல் வெளிவந்தது. இப்போது தான் பார்க்கக்கிடைத்தது. படம் இப்படித்தொடங்குகிறது. 'பருந்து... தன் இரையை குறிவைக்கிறது: கண்காணிக்கிறது: சிலமணித்தியாலங்கள்: சில நாட்கள்: சிலவாரங்கள்: ஏன் சில மாதங்கள் - உரிய வேளைக்காக உயரத்தில் வட்டமிடுகிறது. அந்த வேளை: மிகச்சரியான அந்த வேளை வந்ததும் - "லபக்.." '

ஆம்! பாதாளஉலகினர் இவ்வாறுதான் இயங்குகிறார்கள். கண்காணிப்பும் தொடர்பாடலும் அவர்களுக்கு இரு கண்கள் போன்றது. ஒரு பொலிஸ் உயர் அதிகாரி பாதாள உலகினர் பற்றிய தனது அனுபவத்தை பதிவு செய்வதாக இத்திரைப்படம் ராம்கோபால் வர்மாவினால் மிகச்சிறப்பாக இயக்கப்பட்டுள்ளது. மும்பை நகர்ப்புறச்சேரிகளில் சிறு இளைஞர் குழுக்களின் (Gangsters) உருவாக்கம், அவர்களுக்கிடையிலான தொடர்பாடல், பிரபல்யம், சேர்ந்தியங்குவதற்கான பேரம்பேசல்கள், சேர்ந்து இயங்குதல், தலைமை உருவாக்கம், போட்டியாளரை அழித்தல் என ஒரு பாதாளஉலகக்குழு எவ்வாறு வளர்கிறது: பலம் பெறுகிறது என்பதையும் அரசும் அரசியல்வாதிகளும், சமூகப்பிரமுகர்களும்!? அவர்களை எவ்வாறு உபயோகப்படுத்துகிறார்கள் என்பதையும் இத்திரைப்படம் நேர்த்தியாக விபரிக்கின்றது. சினிமா, சுங்கம், வர்த்தகம், பாதுகாப்பு, கல்வி முதலிய இன்னோரன்ன துறைகளில் ஊடுருவி இத்துறைகள் சார்ந்த தலைவிதிகளை இவர்கள் எவ்வாறு தீர்மானிக்கிறார்கள் அல்லது மாற்றுகிறார்கள் என்பதை நுணுக்கமாகக்காட்டுகிறது இத்திரைப்படம்.
மேலும் சர்வதேசரீதியிலான அவர்களது வலைப்பின்னல் ஸ்தாபகமும் அவர்களுக்கேயான தனித்துவ நீதியும் நியாயங்களும் காதலும் அன்பும் சுவாரசியமாக விளக்கப்படுகிறது. தவறான புரிந்துணர்வு ஒன்றால் பாதாள உயர்மட்ட தலைவர்களுக்குள் ஏற்படும் பிரிவும் அதன்விளைவாக அயல்நாடுகளிலும் மும்பையின் சந்துபொந்துகளில் நடக்கும் கொலைகளும் காவல்துறையினரின் கையாலாகாத்தனமும் மக்களின் குழப்பமும் தங்களின் குட்டுக்களும் வெளிப்படலாம் என்ற அரசியல்வாதிகளின் அச்சமும் அதிர்ச்சியும் பாதாள உலகத்தினரிற்கேயான பரபரப்புடனும் த்ரில் உடனும் சொல்லப்படுவது யாழ்ப்பாணத்திலும் இலங்கையிலும் நடக்கும் அன்றாடப்படுகொலைகளை ஞாபகப்படுத்துகிறது அல்லது புரியவைக்கிறது. இறுதியில் நேர்மையான பொலிஸ் அதிகாரி ஒருவரால் அவர்களில் ஒருவர் கென்ய நாட்டில் காயமுற்ற நிலையில் கைதுசெய்யப்படுவதையும் அதன்மூலம் அப்பாதாளக்குழு ஒடுக்கப்படுவதையும் ஆனாலும் சிறிய அளவிலாவது அதன்செயற்பாடுகள் மூன்றாம் மட்ட தலைவர்களால் முன்னெடுத்துச்செல்லப்படுவதையும் யதார்த்தமாகவும் உணர்ச்சிகரமாகவும் சொல்லியிருக்கிறார் இயக்குனர். கைதுசெய்யபட்ட பாதாள தலைவரை சந்தித்து தன்னைப்பற்றிய உண்மைகளை சொல்லிவிடாதே என இரகசியமாக வேண்டுகோள் விடும் உள்துறை அமைச்சரை அவரது மெய்பாதுகாவலரது துப்பாக்கியாலேயே சுட்டுக்கொல்வது அருமையான 'திடுக்'. பலரது தலைவிதியை நிர்ணயித்த ஒருவர் சாதாரண ஆயள்கைதியாகி குற்றமனப்பான்மையால் வெதும்புவது வாழ்க்கையின் சுழலை காட்டுகிறது. அஜேய் தேவ்கான், விவேக் ஒபராய், மோகன்லால் ஆகியோர் பிரமாதமாக நடித்துள்ளனர். இதைவிட படத்தின் தொழில்நுட்ப அம்சங்களும் கமெரா கோணங்களும் பின்னணி இசையும் ஒரு வித்தியாசமான நல்ல படத்தைப்பார்த்த உணர்வைத்தருகிறது. ஆங்கில உபதலைப்புள்ள டி.வி.டி யில் பார்ப்பது புரிதலை இலகுவாக்கும். படம் பார்த்தபின்பு யாழில் இன்று நடந்துகொண்டிருக்கும் படுகொலைகள் ஞாபகத்திற்கு வருவது தவிர்க்கமுடியாதது.

No comments: