Wednesday, October 5, 2011

விடுதலை

(யாழிலிருந்து வெளிவரும் "வலம்புரி - சங்குநாதம்" 03-09 நவம்பர் வார இதழில் பிரசுரமானது.)

அந்தப் பிரதேசத்திற்கே உரித்தான தனித்துவமான கட்டியங்களோடு அந்தக் காலையும் புலர்ந்தது. காதைப் பிளந்து கடந்து சென்ற ஆட்லறிகள்; தவில் வித்துவானின் லய லாவண்யம் போல் துப்பாக்கி வேட்டுக்களின் சலிக்காத முழக்கங்கள்; புகையைக் கக்கியபடி வாகனங்களின் ஓட்டம்; பேய் அறைந்தது போல் காய்ந்து இறுகிச் சலித்துப்போன முகங்கள்; மரங்களின் கீழ் நான்கு தடிகளை நட்டு நான்கு புறமும் பழைய சீலைகளால் கட்டப்பட்டு மதியம் தவிர காலையும் மாலையும் சூரிய வெயிலில் வெளிறிப் போன குடிலா..? மறைப்பா..?, என்று ஐயப்படும் படியான மனித வாழ்விடங்கள்; பட்டினியே வழமையாகி உயிரைத் தக்க வைத்துக்கொண்டிருக்கும் மழலைத்தனம் வற்றிப்போன மழலைகள்; ஐயோ! ஆண்டவரே என்ற நோயாளிகளின் முனகல்கள்; எல்லாவற்றையும் வழமையான ஒரு லாவகத்தோடு சந்தித்தபடி அன்றைய காலையும் புலர்ந்திருந்தது.

அவன் அந்தப் பெரிய மரத்தின் வேரொன்றில் அமர்ந்திருந்தான். நேற்று வானில் (Van) கொண்டுவந்து கொடுத்த அரை இறாத்தல் பாணை வாங்க முண்டியடித்ததில் அவனது வலது காலின் சின்ன விரல் சிதைந்திருந்தது. அந்த ரணத்தினால் அவனது இரவுத் தூக்கம் கலைந்திருக்க இரவின் பெரும் பகுதியை கட்டாந்தரையில் ஒரு சொறிநாய்க்கு அருகாமையில் கழித்திருந்தான். உலகத்தின் சோகங்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து அவனது கண்களாக மாறியிருந்தன. காலில் மொய்த்த இலையான்களை கலைக்கவே அவனிற்கு திராணி இல்லாதிருந்தது. ஷெல் சத்தம் காதை செவிடுபடுத்தியது. அவனை அது பாதித்ததாகத் தெரியவில்லை. தூரத்தில் ஷெல்களால் எழுந்த புகை மூட்டங்கள் தெரிந்தன. நான்காவது மரத்தின் கீழிருந்த மறைப்பில் இருந்த கிழவி இறந்து போயிருக்க வேண்டும். ஒப்பாரிச் சத்தம் வெடியோசைகளையும் மீறி சூழ்நிலையை மிகவும் பயங்கரப்படுத்தியது.

அவன் மெதுவாக எழுந்திருக்க முயன்றான். கால்வலி சுண்டி இழுத்தது. ஐயோ! அம்மா!! பலமாக கத்துவதாக அவன் கருதினாலும் சத்தம் முனகலாகவே வெளிவந்தது. அருகில் படுத்திருந்த நாய் அசையாது இருந்தது. இடது காலினால் தட்டிப் பார்த்தான். 'பச்... செத்துப்போட்டுது..' அவன் வாய் அனுதாபத்தோடு முணுமுணுத்தது.

அடுத்த கூடாரத்தில் குழந்தை ஒன்று உச்சஸ்தாயியில் கதறியது. பசியாயிருக்குமோ? அப்படியே இருந்தாலும் அவர்களிடம் கொடுக்க எதுவுமில்லை. ஒவ்வொரு இடம்பெயர்வின் போதும் இழந்து இழந்து அவர்களிடம் இனி இழக்க உயிர் மட்டுமே எஞ்சியிருந்தது. மெதுவாக எழுந்து சில அடிகள் வைத்தான். நாய் ஒன்று ஒரு கூடாரத்திலிருந்து பாண் துண்டு ஒன்றைக் கெளவிக்கொண்டு ஓடியது. அடீக், தரித்திரம் மனிசருக்கே சாப்பிட வழியில்லை உனக்கு சாப்பாடோ? - கூடாரத்தில் இருந்து கத்தியபடி வந்தவன் எறிந்த கொட்டன் சரியாக நாயில் பட்டு அது கால்களை இரண்டு மூன்று தரம் உதறிவிட்டு அமைதியானது. அதன் வாயிலிருந்த பாண் மண்ணில் புரண்டு வித்தியாசமான பண்டமாக காட்சி தந்தது.

அவன் இதையெல்லாம் பார்த்தபடி நின்றான். அவனிற்கு இப்போது ஏழு வயதாகிறது. நான்கு வயதில் ஆரம்பித்த இடம்பொயர்வுகளும், அழிவுகளும் இறுதியி்ல் இந்த காட்டு வாழ்க்கைக்கு மாற்றியிருந்தன. போன மாதம் நிவாரணம் பதிய என்று புறப்பட்டுப்போன பெற்றோர் பின் திரும்பிவரவேயில்லை. குண்டு வீச்சில் உருத்தெரியாத சடலங்களில் அவர்களும் அடங்கியிருக்கலாம். இவனிற்கு காய்ச்சல் என்று பக்கத்து கூடாரத்தவர்களிடம் ஒப்படைத்துப் போனார்கள். பெற்றோர் போனதுடன் கூடாரத்தில் இருந்த துணிகளும் எஞ்சிய ஓரிரண்டு சாமான்களும் காணாமல் போக இவன் அந்தப் பிரதேச அநாதைகளின் எண்ணிக்கையை ஒன்றால் அதிகப்படுத்தினான். அதன் பின் அவன் இரண்டு இடங்கள் மாறிவிட்டான். யாரும் அவனை என்ன ஏது என்று விசாரிக்கவில்லை. குளித்து நாளாகிறது. சாப்பாடு கிடைக்கும் போது உண்பான். மரங்களின் கீழ் உறக்கம். மனித இன ஆரம்பத்தை நோக்கி அவன் போய்க்கொண்டிருந்தான்.

ஆங்காங்கே பிய்ந்து தொங்கிய காற்சட்டையை இழுத்துவிட்டபடி அவன் நடந்து கொண்டிருந்தான். சூரியக் கதிர்களின் வெம்மை கலக்க ஆரம்பித்திருந்தது. இவனிற்கு கண்கள் புகைந்தது. இன்றைக்கு எப்படியாவது சாப்பிட வேண்டும் அவன் வயிறு கெஞ்சி அலுத்துப்போய்விட்டது. கிணறு ஒன்றில் கும்பலாக சனங்கள் நின்றார்கள். மனித சடலங்கள் என்ற பெயரிற்கு அவர்கள் பொருத்தமானவர்கள். ஒட்டியுலர்நத கைகளும் கால்களும்; உணர்வுகள் வற்றிப்போன கண்களும்; உண்ணத் துடிக்கும் வாய்களும் அவர்களிடம் பயங்கரத்தோடு கூடிய அருவருப்பான தோற்றத்தை ஏற்படுத்தியிருந்தது.

இவன் அவர்கள் கால்களுக்கு இடையில் புகுந்து தண்ணீர் குடிக்க முயன்றான். "சீ...சீ போடா.." யாரோ அவனைத் தள்ளினார்கள். "சீ பாவம் அதுக்கு முதலில் ஊத்துங்கோ..." யாரோ தண்ணீர் ஊற்றினார்கள். இவன் குடித்துவிட்டு கூட்டத்தை விலத்தி நடந்தான். தண்ணீர் பட்டதில் கால்வலி இன்னும் கூடிய மாதிரி இருந்தது.

நேற்று எவ்வளவு முண்டியடித்தும் அவனால் பாணை வாங்கமுடியவில்லை. லொறி வரேல்லையாம். இன்றைக்கு பாண் வான் வரும் என எதிர்பார்க்க முடியாது. காட்டிற்குள் போய் உணவு தேடுவதே அவனது நோக்கமாக இருந்தது.

வீதியை விட்டு பற்றைக்குள் இறங்கினான். தூரத்தில் சண்டை நடந்துகொண்டிருப்பது தெளிவாக கேட்டது. ஷெல்கள் இனி இங்காலையும் விழலாம். அனுபவத்தில் ஊகித்துக் கொண்டான். அவனிற்கு முன்பே சிலர் காட்டிற்குள் வேட்டையாட இறங்கி இருந்தனர். தூரத்தில் அவர்களின் நடமாட்டம் தெரிந்தது. இவனுக்கு ஒவ்வோர் அடியும் எடுத்து வைப்பது பெரும் பிரயத்தனமாக இருந்தது. பற்றைக்குள் இருந்து சரக்கென்று ஏதோ ஓடியது. இவன் நடந்துகொண்டிருந்தான்.

திடீரென ஒரு சலசலப்புத் தோன்றியது. பறவைகள் கலவரமாகப் பறந்தன. காகங்கள் அந்தரித்துப் கரைந்தன. அவனுக்கு அந்தப்பாஷை அனுபவத்தில் தெரிந்திருந்தது. காதுகளைக் கூர்மையாக்கி வானத்தின் விளிம்புகள் வரை பார்வையை படரவிட்டான். ஆம், அவன் நினைத்தது சரியாகிவிட்டது. தூரத்தில் இரண்டு குண்டுவீச்சு விமானங்கள் வருவது தெரிந்தது. மக்கள் குடியிருந்த மரங்களின் கீழும் பதற்றமான ஒலிகள் எழும்ப ஆரம்பித்தன. பழுதாகிப் போய் நின்றிருந்த வாகனம் குண்டுவீசப்படும் பிரதேசத்தை உறுதியாக்கியது. 'டேய் பொம்மர் ஓர்றா...'; ஐயோ பிள்ளை இஞ்சை வாடி'; 'படுங்கோ எல்லாரும் படுங்கோ'; அப்பா தம்பிரானே முருகா' பேதலித்த குரல்கள் உச்சஸ்தாயியில் ஒலித்துக்கொண்டிருக்க சிலர் பதுங்கினார்கள். சிலர் சிதறி ஓடினார்கள். இவனிற்கு நிலமை விளங்க அருகில் இருந்த பெரிய பாறை ஒன்றுடன் ஒட்டிக்கொண்டான். கீழே கடியெறும்புகள். தட்டிக்கொண்டே பாறையின் மறுபக்கம் பதுங்கினான்.

விமானங்கள் கிட்ட நெருங்கிவிட்டன. இரைச்சல் காதிற்கு ஒவ்வாததாக இருந்தது. முதல் குண்டு விழுந்ததுமே வீதியோரம் புகைமண்டலமாகியது. அவலக் குரல்கள் ஓங்கி ஒலித்தன. பதுங்கி இருந்தவர்கள் மேலும் சிதறி ஓடினார்கள். சிலர் காயப்பட்டவர்களைத் தூக்கி முதலுதவி செய்ய, சிலர் சிதறிய கூட்டத்தில் தங்கள் உறவுகள் இருப்பதை நிச்சயப்படுத்தக் கூவி அழைக்க சூழல் பெரும் அவலமாகியது. இவனிற்கு மிகவும் பயமாக இருந்தது. அழுதழுது வற்றிப்போன கண்ணீர் மீண்டும் ஊற்றெடுத்து கன்னங்களில் வழிந்தது. பெற்றோரை நினைத்துக்கொண்டான். நானும் செத்துப்போவேனா? ஏக்கத்துடன் இன்னும் பாறையுடன் ஒண்டிக்கொண்டான்.

அடுத்த விமானம் குண்டை கழற்றியது இவனிற்கு இங்கிருந்தே தெரிந்தது. கறுப்பாக சின்னதாக ஒன்று விமானத்திலிருந்து பிரிந்தது. இவனிற்குள் அவஸ்தையாயிருந்தது. செத்தால் நல்லது போலப்பட்டது. இப்படி அலைச்சலில்லை, பசியில்லை, பயமில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக இந்தக் காலின் வலி இல்லை.

அவனது கண்ணீர் பாறையை நனைத்தது. சின்னதாகத் தெரிநத குண்டு பெரிதாகிப் பெரிதாகி... அட இதென்ன அவன் உச்சி முதல் உள்ளங் கால் வரை மின்சாரம் பாய்ந்து, நிலமை விளங்கி சுதாகரிப்பதற்கிடையில் அப்பகுதி புகைமண்டலமாகி அவன் ஒண்டியிருந்த பாறை காணாமற் போயிருக்க அவன் காற்றுடன் கலந்திருந்தான்.

Monday, September 12, 2011

ஓடும் ரயிலில் ஓடும் மனங்கள்

(பேராதனை பல்கலைக்கழகத்தின் கீதம் இலக்கியப்போட்டி - 2000 இல் இரண்டாம் பரிசு பெற்றது)

பண்டிதருக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. அந்தப் பெட்டி அவரது மனைவி இன்னுமொரு பெண்பிள்ளையை தவிர மற்ற ஆசனங்கள் காலியாகவே இருந்தது. அங்காலை எங்கயும் பிரச்சனையோ தெரியேல்லை - பண்டிதர் மெதுவாக கவலைப்பட்டுக் கொண்டார். அவரது மனைவிக்கு லேசான தடிமன் வந்ததும் படுத்து விட்டாள்.

பண்டிதரின் பெயர் வீரசாமிப்பிள்ளை. பழுத்த தமிழறிஞர். திருமணமானதில் இருந்து வவுனியாவிலேயே இருக்கிறார். பத்து வருடங்களிற்கு முன்னம் பாடசாலை அதிபராக இருந்து ஓய்வு பெற்றவர். மூத்த மகன் அவுஸ்திரலியாவில் படித்து அமெரிக்காவில் தொழில் பார்க்கின்றான். மகள் கொழும்பில் குடும்பத்துடன் இருக்கிறாள். கடைக்குட்டி சிங்கப்பூரில் ஏதோ ஸ்கொலர்ஷிப் கிடைத்து படித்து இப்போது லீவில் வந்து நிற்கிறானாம். கொழும்பில் மகளிடமிருந்து தகவல் வந்தது. வவுனியா வந்தா பாஸ் கெடுபிடியாம் அதனால் கொழும்புக்கு வரச்சொல்லி கட்டளையோ வேண்டுகோளோ என்ன என்று தெரியவில்லை. ஆனாலும் புத்திர வாஞ்சையால் பண்டிதரும் மனைவியும் கொழும்பு பிரயாணப்படும் முகமாக ரயிலேறி இருக்கிறார்கள்.

எதிர் ஆசனத்தில் இருந்த பெண் யன்னலூடாக தோழிகளாகத்தான் இருக்க வேண்டும் - அவர்களுடன் கதைத்துக்கொண்டிருந்தாள். ரயில் புறப்பட இரண்டு நிமிடம் இருந்தது. பண்டிதர் எதிர்புறத்தில் இருந்த பெண்ணை எடை போட்டார். தலையை நாகரீகமாக இழுத்து முன்பகுதியில் சிறிது விட்டு பின் பக்கம் கூந்தலை கிளிப்செய்திருந்தாள். கணுக்காலளவு வருமாறு கொழும்பு பிளானில் பாவாடை அணிந்து ஏற்றாற்போல் சட்டையும் அணிந்திருந்தாள். நெற்றியில் பொட்டில்லை. காதில் தங்கமா, பிளாஸ்ரிக்கா என்று அடையாளம் தெரியாத மாதிரி சிக்கனமாக தோடு, கழுத்தில் மெல்லிய செயின், கையில் ஒரு சோடி காப்பு என்று மிகவும் சிக்கனமாக ஒப்பனையோடு அழகாகத் தெரிந்தாள். கூடியளவில் தங்க நகைகளைத் தவிர்த்திருப்பது புரிந்தது. கள்ளர் பயமும் தானே. காலில் நாகரிகமான பின்னல் செருப்பணிந்து மொத்தத்தில் பண்பான நாகரிகமானவளாகவே தெரிந்ததில் பண்டிதர் நிம்மதிப் பெருமூச்சு விட்டார். இப்பவெல்லாம் கள்ளர் என்னென்னவோ பிரயாணங்களில் அவதானமாகவே இருப்பார்.

எதிர் ஆசனப் பெண் கையசைத்து கதைத்தவர்களிற்கு விடை கொடுத்தாள். பண்டிதரிற்கு பொதுவாக நெற்றியில் பொட்டில்லாத பெண்களைப் பிடிக்காது. இவளும் வைக்கேல்லை. சிங்களத்தியோ தெரியாது என்று நினைத்துக்கொண்டார். வயது இருபத்தியஞ்சு அப்படித்தான் இருக்கும். கலியாணம் ஆனதற்கான அறிகுறியும் இல்லை. இப்பவெல்லாம் சீதனக் கஷ்டமான எத்தனை பிள்ளைகள் இப்பிடி நிக்குதுகள். என்ரை பெடியளுக்கு அவ்வளவாய் சீதனம் வாங்கக்கூடாது. பண்டிதர் சிந்தனையில் ஆழ்ந்தார். அருகில் மனைவி தூங்கிவிட்டிருந்தாள். அவளிற்கு தடிமன் வேறு.

விசில் சத்தத்துடன் ரயில் புறப்படவும் பண்டிதர் சிந்தனை கலைந்தார். திடுமென ஒரு இளைஞன் பெட்டியினுள் பிரவேசித்தான். பார்க்க மிகவும் நாகரிகமாகத் தெரிந்தான். ஆனாலும் பண்டிதரிற்கு அவன் செய்தது நாகரிகமாகப் படவில்லை. வந்தவுடன் அவ்வளவு ஆசனம் காலியாக இருந்தும் நேராக வந்து பண்டிதரின் எதிர் இருக்கையில் அப்பெண்ணிற்கு அருகில் அமர்ந்து கொண்டான். இவன் அமர்ந்ததும் அந்தப் பெண் யன்னலோரமாக ஒதுங்கிக்கொண்டாள். இடையில் தனது கைப்பையை வைத்தாள். வந்த இளைஞன் தான் கொண்டுவந்த பிரயாணப்பைகளை சீற்றுக்கு அடியில் தள்ளுவதில் ஈடுபட்டான்.

எதிர் இருக்கைப் பெண்ணின் செயல் பண்டிதரிற்கு திருப்தியாக இருந்தது. ஆதரவாக புன்னகை புரிந்தார். அவளும் சிரித்தாளோ இல்லையோ என்று ஐயப்படும் படியாக சிரித்தாள். தனியவோ வந்தனீங்கள் - பண்டிதர் தமிழிலேயே கேட்டார். "ஓம்" அநதப் பெண் சற்றுத் சத்தமாகவே சொன்ன மாதிரி இருந்தது பண்டிதரிற்கு. இளைஞன் ஒருமுறை இவர்களைத் திரும்பிப் பார்த்துவிட்டு அவர்களுடன் கலந்து கொள்ளாதவன் போல் வெளியில் வேடிக்கை பார்க்க முயன்றான். "கொழும்புக்குத் தானே போறீங்கள்" - பண்டிதர் தொடர்ந்தார். "ஓம் அங்கதான் பாங்ல வேக் பண்றன்" - சட்டெனச் சொல்லிவிட்டு யன்னலினூடாக வெளியில் பார்க்கத் தொடங்கினாள். பண்டிதரிற்கு சினம் வந்தது. அவரை இப்படி ஒருவரும் அலட்சியப்படுத்தியது இல்லை. எந்த பாங்க்.. என்று கேட்க விரும்பியவர் அவசரமாக அந்த யோசனையைக் கைவிட்டார். தமிழில் பேசியதிலிருந்து அவளும் தமிழ் தான் என்று தெரிந்தது. ஆனால் இவன் சிங்களவன் போல என்று பண்டிதர் ஊகித்தார். அவர்களது தமிழ் பேச்சு அவனிற்குப் புரிந்தது மாதிரிக் காட்டிக்கொள்ளவில்லை. தவிர தலையையும் சிங்கள பாணியில் மொட்டையாக வெட்டி இருந்தான். முகத்தில் எப்போதும் ஒரு புன்னகையோ மென்னகையோ எதுவோ ஒன்று தவழ்ந்து கொண்டிருக்க உணர்ச்சியேதும் வெளிக்காட்டாமல் 'கம்' என்று அமர்ந்திருந்தான். அதிலும் ஒரு கம்பீரம் இருப்பதாகப்பட்டது. ஆனாலும் நம்பேலாது. அந்தப் பெண்ணுக்குப் பக்கத்தில் வந்திருந்தது பண்டிதரிற்கு எச்சரிக்கை உணர்வையே ஊட்டியது. பாக்குக்குள் (Bag) பதத்தாயிரம் வேறு இருக்கிறது. பண்டிதர் தனது பித்தளைக் கைப்பிடிபோட்ட கைத்தடியை எடுத்து அருகில் வைத்துக்கொண்டார். அவர் ஒன்றும் தடியூன்றி நடப்பவரல்ல என்றாலும் ஒரு கம்பீரம் சக துணைக்காக அதனை வைத்திருக்கிறார்.

பண்டிதருக்கு ஏமாற்றமாக இருந்தது. ரயில் மதவாச்சியில் நின்று போனபோதும் யாரும் அந்தப் பெட்டியில் ஏறவில்லை. பண்டிதரிற்கு யாராவது துணைக்கு வந்தால் இன்னும் பாதுகாப்பாக இருக்கும் என்று தோன்றியது. எதிர் ஆசனப் பெண் தமிழ் பேசுகிறாள். ஆனால் அதையும் தமிங்கிலீஷ் ஆகவே பேசுகிறாள். அதாவது ஆங்கிலம் கலந்து. அவள் தமிழ் தான் என்பதற்கு அவளிடம் எந்த அடையாளமும் இல்லை. பண்டிதரிற்கு லீலா கலண்டர் ஒற்றை ஒன்றை கிழிக்கும் போது பார்த்த "நரைபெயர்வதேன்" என்ற இலக்குவனாரின் கவிதை தான் ஞாபகத்திற்கு வந்தது.

யாண்டு பல இன்றியும் நரையுளவாகுதல்
யாங்காகிய தென வினவுவராயின்
ஆண்டநம் மக்கள் அடிமைகளாயினர்
பூண்டநம் பண்பு போலியதாகின்ற
நற்றமிழ் மறந்தனர் நானிலமதனில்
பிறமொழி பற்றிற் பெரியோராகினர்
தமிழகத் தெருவில்தமிழ்தான் இல்லை
ஊரும் பேரும் உயர் மொழி வழக்கும்
அயல்மொழி தன்னில் அமைந்திடக் கண்டோம்
தமிழைக்கற்றோர் தாழ்நிலையுறுவதால்
தமிழைப் பயில தமிழரே வந்திலர்
ஆட்சி மொழியாம் அன்னை மொழியினைச்
செல்லெனவாக்கினர் தூத்தமிழ் வெறுக்கும்
அயல்மொழிக் காதலர் ஆட்சி கொண்டுளர்
மக்கள் கருமயிர் நரையாதிருக்குமா?

…………………இவளுக்கு இன்னும் நரைக்கயில்லை பண்டிதர் சிரித்துக்கொண்டார்.


ரயிலின் ஆவர்த்தன இசையைத் தவிர அந்தப்பெட்டி நிசப்பதமாகவே இருந்தது. அந்த சூழ்நிலையை அந்த இளைஞன் தான் முதலில் கலைத்தான். அந்தப் பெண் இடையில் வைத்திருந்த கைப்பையையும் நெருக்கிக்கொண்டு அமர்ந்து அவளை நோக்கி ஏதோ சொன்னான். பண்டிதரிற்கு விளங்கவில்லை. அந்தப் பெண் வெடுக்.. என்று திரும்பி முகத்தைக் கடுப்பாக்கி மீண்டும் வெளியில் பார்த்தாள். பெடியனைப் பார்த்தால் படித்தவன் மாதிரித் தெரியுது. ஆனால் சுயரூபத்தைக் காட்டவெளிக்கிட்டுட்டான். பண்டிதர் அலேட் ஆனார். அந்த இளைஞன் முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லாது புன்னகையோடு இருந்தான்.அயோக்கிய ராஸ்கல் ஒரு பிள்ளை தனிய வருகுதெண்டால் காணும் தடிப்பயல் மனதிற்குள் திட்டிக்கொண்டார். குரலை கொஞ்சம் செருமிக் கொண்டு "நீங்கள் இஞ்சாலை வாங்கோவன் நான் அதிலை இருக்கிறன் தம்பி கொஞ்சம் தகராறு பண்ணிறார் போல" - பண்டிதர் ஆதரவாக பேசினார். "தாங்ஸ்.... பரவாயில்லை" என்றுவிட்டு மீண்டும் வெளியில் பார்த்தாள்.

பண்டிதரிற்கு சினம் தாள முடியவில்லை. "இந்த பெடிச்சிக்கு எத்தனை திமிர் இருந்தால் இப்பிடி சொல்லுவாள். நான் பாவம் பெட்டை என்று சே... நல்லா பட்டுத் தெளியட்டும்" - பண்டிதர் வெறுத்துக்கொண்டார். அருகில் மனைவி அமைதியாக உறங்கியது அவர் சினத்தை மேலும் அதிகமாக்கியது. வெற்றிலை சப்பி தன்னை நிதானத்திற்குள் கொண்டுவர முயன்றார்.

அந்த இளைஞன் கொஞ்ச நேரம் கழித்து "நேரம் என்ன" என்று அவளிடம் ஆங்கிலத்தில் கேட்டான். அவள் அலட்சியமாக மணிக்கூடு இருந்த கையையும் மறுபக்கம் கொண்டுபோய் வெளியில் பார்த்துக்கொண்டு இருந்தாள். "இந்த ராஸ்கோலிற்கு என்னட்டையும் ஒரு சிற்றிசன் வோச் இருக்கிறது தெரியேல்லையோ.............. ராஸ்கல் தானும் ஒரு மணிக்கூடு கட்டிக்கொண்டு அவளைப்போய்க் கேட்கிறான். கழிசடை இவனிற்கும் வேணும் அவளிற்கும் வேணும் " - பண்டிதர் திட்டித் தீர்த்தார்.

அவன் அதே புன்னகையுடன் அவள் மணிக்கூடு கட்டியிருந்த கையை இழுத்து பலவந்தமாக நேரம் பார்த்தான். அவள் கையை இழுத்துக்கொண்டு அவனை முறைத்துப் பார்த்துவிட்டு இன்னும் ஓரமாக ஒதுங்கி வெளியில் பார்க்கத் தொடங்கினாள். பண்டிதர் திடுக்கிட்டுப் போனார். 'இந்த தடியனிற்கு நான் இருக்கிறது தெரியேல்லையோ தடிக்கழுதை தன்னை இந்தக் கிழவன் என்ன செய்யேலும் என்ற திமிர் தானே கள்ள நாய்ப்பயல்" - பண்டிதர் மனதில் திட்டியதை கண்களில் தேக்கி அவனை உக்கிரமாக முறைத்துப் பார்த்தான். அவன் அதற்கும் அதே புன்னகையுடன் இருந்தது பண்டிதரின் பிரஷரை இன்னும் ஏற்றியது.

அவள் என்னதான் திமிர் பிடித்த பெட்டையென்றாலும் இவனை இப்பிடியே விடக்கூடாது. இனி என்னவும் செய்யட்டும். இந்த வீரசாமி யார் என்று தெரியும் ராஸ்கோல் - பண்டிதர் கறுவிக் கொண்டார்.

அவன் கொஞ்ச நேரத்தில் இருவருக்குமிடையில் இருந்த கைப்பையை எடுத்து அதனை திறக்க முற்பட்டான். அவள் சட்டென:று திரும்பி அதை இழுக்க இவன் இன்னும் இழுக்க - பண்டிதரிற்கு பொறுமை மீறியது.
டேய் எளிய ராஸ்கோல் என்று கத்திக்கொண்டு கைத்தடியுடன் பாய்ந்தார். ஓ.... நோ என்று கத்திக்கொண்டே அந்தப் பெண் மிக விரைவாக பண்டிதரை தடுத்திராவிட்டால் அவனிற்கு மண்டை உடைந்திருக்கும். அவளிற்கு அதிர்ச்சியில் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கியது. பண்டிதர் விக்கித்துப்போய் நின்றார்.
சத்தங்கேட்டு பண்டிதரின் மனைவியும் எழும்பி மலங்க மலங்க விழித்தபடி என்னப்பா என்ன கள்ளனே என்று கத்த தொடங்க பண்டிதர் அவளைப் பார்வையால் அடக்கிவிட்டு அந்தப் பெண்ணை சினத்துடன் பார்த்தாள். அவளே சொன்னாள் "சொறி சேர் இவர் என்ர ஹஸ்பண்ட் தான் இவரும் தமிழ் தான். அவசரமாக ஹான்ட் பாக்கினுள் இருந்த தாலிக்கொடியுடன் கல்யாணப் போட்டோவும் காட்டினாள். பொட்டு வைத்து கொடி போட்டால் தமிழர் என்று தெரியும். வீணான செக்கிங்குகள் தவிர கள்ளர் பயமும். அதுதான் இப்பிடியே இருந்தால் வசதி தானே. மற்றது அவரிற்கும் எனக்கும் ஒரு ஆர்கியூமென்டால சின்ன சண்டை அதுதான் அப்பிடி..." அவள் நாணிக் கோண..; அவள் சொன்னதைக் கேட்டு பண்டிதர் வாய்பிளந்து நிற்க..; அந்த இளைஞன் அதே புன்னகையுடன் இருக்க..; பண்டிதரின் மனைவி ஒன்றும் புரியாது விழித்தாள்.

Thursday, August 11, 2011

சிகை

இந்த சிகை அலங்கரிப்பு என்கிறது உங்களுக்கு எப்படியோ தெரியாது. ஆனால் எனக்கு அது ஒரு இன்பமான அனுபவம். அதற்கேற்றமாதிரியே தலை மயிரும் மசமசவென்று வளர்ந்து விடும். எனவே மாதத்திற்கு ஒரு முறையாவது எனக்கு இந்த அனுபவம் கிட்டும். பாபரின் கையிலுள்ள சீப்பு தலையில் மேயும் போதும் கத்தரிக்கோல் இதமாக சிகைக்குள் ஊடுருவும் போதும் கிறக்கமாக இருக்கும்.

சின்னப்பிள்ளையாக இருக்கும் போதெல்லாம் வீட்டிற்கு பாபர் வருவார். வீட்டிற்குப் பின் நிற்கும் கொய்யா மரநிழல் தான் தற்காலிக சலூனாகும். காலையில் நடக்கிற ஏற்பாடுகளே வீட்டிற்கு பாபர் வரபோவதை பறைசாற்றும். சிகைக்காய் ஊறப்போடுவதிலிருந்து பனங்குடலைக்குள் ஆட்டிறைச்சி வருவது வரை ஒரு முதலாந்தர முழுக்கு இண்டைக்கு இருக்கு என்பதை ஞாபகப்படுத்தும்.

அநேகமாக குடும்பத்தில் வரிசைக் கிரமத்தில் நான்தான் முதலாவது ஆளாய் கொய்யாமரத்தின் கீழ் பலகையில் இருக்க வேண்டும். பாபர் தனது பையிலிருந்து எடுத்து பரப்பும் சாதனங்களையே ஒரு பயம் கலந்த த்ரிலுடன் பார்த்துக் கொண்டிருப்பேன். ஆச்சி இடைக்கிடை வந்து மேற்பார்வை வேறு. மணியம் "சின்னவனுக்கு நல்ல பொலிஸ் குறப் அடிச்சு விடப்பா". எனக்கு அதில் உடன்பாடு இல்லாவிட்டாலும் பிற்பாடு சில சுவாரஸ்யமான தருணங்களுக்காக உடன்படுவேன். அவசரப்படாதேங்கோ.... அந்த தருணங்களைப் பிறகு சொல்கிறேன்.

ஆரம்பத்தில் தண்ணீர் எல்லாம் தலைக்குப் போட வேண்டியதில்லை. நல்லெண்ணையையே பானையைக் கவிழ்த்து ஊற்றிவிட்ட மாதிரி முகம் முழுக்க வழியிற மாதிரி ஆச்சி அப்பி விடுவா. முதலில் உச்சி பிரித்து நாடியில் பிடித்து தலை நிமிர்த்தி அப்பிடியும் இப்பிடியும் பார்த்துவிட்டு பாபர் வேலையை தொடங்கினார் என்றால் நான் என்னை மறந்து போவேன். காதில் ஒலிக்கும் கீச் கீச் கத்தரிக்ககோல் சத்தமும் சீப்பு கேசத்தை அடிக்கடி வருடும் போதும் ஆஹா என்ன ஒரு அனுபவம்!

வெட்டி முடிய முடி ஒதுக்கும் கத்தி பாவிப்பார் பாபர். எனக்கு அது ஒரு த்ரிலிங். இதற்கிடையில் ஆச்சியும், அம்மாவும் இடைக்கிடை விஜயம் செய்து உபரியாக ஏதாவது அழகு உபாயங்கள் உதிர்த்துவிட்டு போவார்கள். நான் ஒரு ஞான + பரவச நிலையில் அமர்ந்திருப்பேன். அவ்வப்போது தம்பி குனியப்பா - ஆ... இந்தப் பக்கம் என்று மணியத்தாரிடமிருந்து அறிவிப்புக்கள் வரும் போது இயந்திர தனமாக இயங்குவேன். முடி ஒதுக்கும் கத்தியால் காதை மடித்துக்கொண்டு மெதுவாக உரசி உரசி அப்பிடியே பிடரி வரை கொண்டுவந்து ங்ய்ய்...... என்று அப்பிடியே ஒரு லாவகமான இழுவை.... அந்த அதிர்வு அப்படியே கால்வரை சுண்டியிழுத்து புல்லரித்து ஒரு மெய்சிலிர்த்த நிலை அடைவேன். சில வேளைகளில் ஆச்சியிடம் முதலே சொல்லி அப்படி இரண்டு மூன்று தரம் இழுக்க வைத்திருக்கிறேன்.

இறுதியாக பிடரியில் பவுடர் பஞ்சால் ஒத்தி மணியத்தார் அப்பிடியும் இப்பிடியும் பார்த்து துண்டால் ஒரு உதறு உதறி முதுகில் ஒரு தட்டு தட்டினார் என்றால் ஓ.கே ஆட்டம் முடிவடைந்தது என்று அர்த்தம்.

தலையில் சடை குறைந்து பொலிஸ் குறப்பில் காற்று கொஞ்சமும் தயக்கம் இல்லாமல் நுழைந்து மண்டையில் படும்போது லக்ஸ் விளம்பர நங்கை மாதிரி ஒரு புத்துணர்ச்சி ஏற்படும்.

அதன் பின்னர் நான் ஆறாம் வகுப்பு அப்படி படிக்கும் போது வீட்டில் சிகை அலங்கரிக்கும் நிலை மாறி சலூனிற்கு போக வேண்டிய நிலை வந்தது. அடிப்படை விஷயந்தான் மாறாவிட்டாலும் உயரமான கதிரையும், பெரிய கண்ணாடியில் முடி கபளீகரம் செய்யப்படுவதை நேரடியாக தரிசிப்பதும், ஸ்பிறேயரில் தண்ணி அடிப்பதும் என்னதான் எண்ணெய் வைச்சாலும் தண்ணியை தலையில் ஒரு தடவை அடிச்சே தீருவார்கள். கண்ணாடிக்கு பக்கத்தில் கட்டண விபரங்கள் சுத்திவர ரஜனி, சிவாஜி, ரேவதி, சிலுக்கு படங்கள். மூலையில் சாமிப்படங்கள். முன்னால் சிணுங்கிக் கொண்டிருக்கும் விளக்கு என்பவை மேலதிகமாகச் சேர்க்கப்பட வேண்டிய விசயங்கள்.

என்ன தான் ஆறாம் வகுப்பு என்றாலும் கதிரை கைப்பிடிச் சட்டத்தில் பலகை வைத்து இன்னும் உயரமாக ஏறி இருப்பது கொஞ்சம் வெட்கமாகத் தான் இருக்கும் என்றாலும் சுகானுபவத்திற்காக பொறுத்துக்கொள்வேன். இப்பவும் அடிப்படை அலங்கரிப்பு அப்பா பின்னால் இருந்து கொண்டே சொல்லும் பொலிஸ் குறப் தான். இவனுக்கு கெதியா வளர்ந்திடும். பள்ளிக்கூடத்திலும் கொலரில் முடி படக்கூடாதாம் - உபரி விளக்கம் வேறு. - என்றாலும் நான் சகித்க் கொள்வேன் - பிற்பாடு அந்த தருணங்களிற்காக - . இப்ப சலூன் அலுவல் முடிஞ்சு வீட்டிற்குப் போனால் நேரே ஹோலுக்குப் போக முடியாது சுத்திக் கொண்டு பின் பக்கமாக கிணற்றடிப் பக்கம் போனால் அங்கு விமர்சனப் பட்டாளமே இருக்கும். அம்மா, ஆச்சி, சகோதரிகள். எல்லோரும் ஆராய்ச்சி செய்து ஆளாளுக்கு தலையை தடவி காதுப்பக்கம் இன்னும் வெட்டியிருக்கலாம். இதென்ன இந்தப் பக்கம் இப்பிடி இருக்கு. அங்கால கூடியிருக்கு - எல்லா விமர்சனங்களையும் கடந்து ஆச்சி ஜட்ஜ்மெண்ட் செய்து எல்லாரையும் அடக்கி சரி போய் முழுகு என்றால் சரி. இல்லாவிட்டால் திரும்பி சலூனுக்கு போக வேண்டியது தான். இஞ்ச கொஞ்சம் இப்பிடி வெட்டட்டுமாம். பொலிஸ் குறப்பில் நின்று கொண்டு இப்படி மைனூட்டான அலங்கரிப்புக்கள் சொல்லும் போது பயங்கர வெட்கமாக இருக்கும்.

முழுகி விட்டு மத்தியானம் நல்ல பிடி பிடித்து விட்டு ஒரு நித்திரை கொண்டு பின்னேரம் மெதுவா எழும்பும்போது தான் அந்த 'தருணம்' தொடங்கும். அதான் முன்னம் சொன்னனே அந்த தருணம் தான். பின்னேரங்களில் தான் பக்கத்து வீட்டு தாரா - அது தான் தாரங்கி - இது சுருக்கமாக தாரா. வரும்போதே இஞ்ச பாரேன் ஆளை மொட்டை பாப்பா என்று தலையை வாஞ்சையாக தடவி பிடரிமயிரில் கையால் தடவி 'ஐயோ கூசுது' என்று சொல்லும் போது நான் பிறவிப் பயன் எல்லாவற்றையும் அடைந்து விடுவேன்.

அதாவது நான் முன்பு குறிப்பிட்ட குழந்தைப் பருவத்திலிருந்து இது தொடர்ந்து வந்ததால் இருபது வயதிலும் நான் கட்டாயமாக பொலிஸ் குறப் வைத்துக் கொண்டு வேண்டுமேன்று பிடரியில் ஒரு சென்ரிமீற்றர் விட்டு வெட்டிக்கொண்டு அடிக்கடி பிடரியைக் காட்டிக் கொண்டு தாராவுக்கு முன்பு நிற்கும் போது இந்த மொட்டையைப் பாருங்கோவன் என்று குமாரி தாரா விரலால் பிடரியில் தடவும் போதும் இது விரசமாக படவில்லை. இந்த நேரத்தில் குமாரி தாராவை நான் வர்ணிக்கவில்லை எனின் அது நான் தமி்ழ் எழுத்துலகத்திற்கு செய்த பெரிய துரோகமாயிடும். ஆனாலும் நான் கொஞ்சம் பாஸ்ட் ஜெனரேசன். அதாலை நான்கு வரியில் எங்கேயோ கேட்ட கவிதை வரிகளை அப்படியே தாராவுக்கு அப்ளை பண்ணுகிறேன்.

நான்காம் பிறை பார்த்தால்
நாய் படாப் பாடென்பார்
நானோ - முழு நிலவைப் பார்த்துவிட்டு
அனுதினமும் அலைகின்றேன்.

இப்பிடியாக தொடங்கி தாரா கடைசியில் என்னை சொந்தமாகவே கவிதை எழுத வைத்து விட்டாள். அதற்கு கரு அவள் என்னைப் பார்த்தவுடன் சொல்லும் 'ஹாய்' தான். அதில் பிறந்தது தான் இந்தக் கவிதை அல்லது கவிதை மாதிரி்.

ஆம்ஸ்ரோங் நிலவு செல்ல
அப்பலோ தேவையானது
ஆனால் - எனக்கோ
அவளின் ஒரு 'ஹாய்' மட்டும் -

உங்களுக்கு பிடிச்சிருக்கோ தெரியாது . ஆனால் எனக்கு பிடிக்க வேண்டிய ஆளுக்கு பிடிச்சிருந்ததில் நான் வெற்றிப் பெருமகனானேன்.

இந்த நேரத்தில் தான் நான் வேலை கிடைத்து A9 ஆல் தலைநகரம் செல்ல வேண்டி இருந்தது. அங்கும் போய் ஒரு சலூனில் சிகை அலங்கரிப்பு செய்வோம் என்றால் அங்கு அடிப்படையையே மாற்றியிருந்தார்கள். அங்கு குசன் வீல் கதிரைகள் .சமாந்தர கண்ணாடிகள், சுவரில் தனுஷ், திரிசா, மும்தாஜ், சகிலா என்று படங்கள் மூலையில் சுவாமி படம் கலர் கலராய் பல்ப் ஒளிர்ந்து கொண்டிருந்தது. கத்தரிக்கோலுக்கு பதில் மின்சார வெட்டும் சாதனம் (Electronic Hair Dressing Machine) டெனிம், புறோஸ்போட் லோசன்கள் இன்னும் எத்தனையோ. யாரோ தனக்கு முன்னால் தான் பிளேட் மாத்தோணும் என்று அடம்பிடித்துக் கொண்டிருந்தார்கள். எய்ட்ஸ் பயம். பவ்யமாக வெல்வெட் வெள்ளை சால்வை போத்தி அண்ணை எப்படி வெட்டுவம் நான் வழக்கம் போலவே நல்ல ஷோட்டா வெட்டுங்கோ என்றுவிட்டு இது வேண்டாம் கத்தரிக்கோலாலேயே வெட்டுங்கோ என்றேன். சலூன் காரன் நான் ஏதோ சபையில் செய்யக்கூடாததை செய்து விட்டவன் மாதிரி பார்த்தான். எனக்கு கத்தரிக்கோலால் வெட்டத் தெரியாது. இது தான் நல்லாயிருக்கும். இருங்கோ என்றுவிட்டு வேலையை தொடங்கினார். இரண்டு நிமிஷம் கொஞ்சம் வெக்கை காத்து அடிச்சது சட்டென்று போர்வை உதறி தட்டி சரி என்ற போது நான் திடுக்கிட்டுவிட்டேன். என்ன சரியோ என்று கண்ணாடியில் பார்த்தபோது அன்னியன் ஒருவன் கண்ணாடியில் தெரிந்தான். பின் இது வே வழக்கமாகி விட்டது.

இடையில் ஊருக்கு வந்த போது பாட்டி ஒப்பாரி வைத்தாள். எடேய்.. எப்படி இருந்த தலையடா இப்படி குரங்கு மாதிரி வந்து நிற்கிறியே. வளந்திடும் ஆச்சி வளந்திடும் - நான் ஆச்சியை சமாதானப்படுத்தினேன். ஆச்சிக்கு வயதேற ஏறத்தான் பிடிவாதமும். ஒரேயடியாய் பிடித்துக்கொண்டாள். உப்பிடியே வளர்ந்தால் சரியாய் வளராது. அடி - மொட்டையை - நான் அதிர்ந்து போனேன். - சே - தாரா என்ன நினைப்பாள். ஆனாலும் ஆச்சியின் பிடிவாதம் வென்று மொட்டையடித்து முழுகி பின்னேரம் சந்தனம் பூசி நின்ற போது - தாரா வந்தாள். எனக்கு உண்மையா கண் கலங்கீட்டுது. தாரா அழுதே விட்டாள். இது என்ன மொட்டை போட்டுக்கொண்டு செல்லமாக தலையை தடவ கையில் சந்தனம் - அழாதையடி பெட்டை கலியாணத்துக்கு முன்னம் அவனுக்கு தலைமயிர் வளர்ந்திடும் என்று தாராவின் கன்னத்தில் செல்லமாக கிள்ளினாள் ஆச்சி. எனக்கு இன்ப அதிர்ச்சி - அட இந்த கிழவியளுக்குத் தான் எவ்வளவு ஞானம் - நானும் தாராவும் கனகாலத்திற்கு பிறகு வெட்கப்பட்டோம்.

Monday, July 25, 2011

எனது முதலாவது சிறுகதை - "ஆறறிவு"




ஆறறிவு
(யாழிலிருந்து வெளிவந்த "சஞ்சீவி" வாரப்பத்திரிகையில் "விஷ்ணுவர்த்தனன்" என்ற புனைபெயரில் 19.09.1998 அன்று பிரசுரமானது.)

கோபுவிற்குச் சந்தோசமாக இருந்தது. இன்று நேரத்துடனேயே அம்மம்மா வந்துவிட்டாள். நேசறிக்கு இன்று பிள்ளைகளும் குறைவு. எப்போது அம்மம்மா வருவா என்று பார்த்துக் கொண்டேயிருந்தான்.
நேசறியில் ரீச்சர் சொன்னது அவனுக்குப் புதினமாக இருந்தது.
“எங்களுக்கு எல்லாம் ஆறு அறிவு இருக்கு. ஆனால் மிருகங்களுக்கு ஐந்தறிவுதான்” கோபுவின் மனதில் மீண்டும் மீண்டும் இதே வாக்கியம் எதிரொலித்தது.
நேற்றுப் பெய்த மழையால் சகதியாகிவிட்ட ஒழுங்கையில் அம்மம்மா கூட்டிச் சென்றாள்.
தன்னிடம் எழுந்த ஐயத்தை அம்மம்மாவிடமே வெளியிட்டான் கோபு.
அம்மம்மா! எங்களுக்கு இருக்கிற ஆறாவது அறிவு என்ன? அம்மம்மா வியப்புடன் பார்த்து “அது அப்பன்……” என்று தொடங்குவதற்குள் கந்தையா மாஸ்டரைக் கண்டுவிட்டாள்.
“அப்ப மாஸ்டர் சாந்தி விசயம் என்ன மாதிரி”
சரி. இனி அம்மம்மா கதைக்க வெளிக்கிட்டுட்டா. கோபுவுக்கு சலிப்பாக இருந்ததது. இலேசில் முடிகின்ற பேச்சாகவும் அவனுக்குத் தோன்றவில்லை. சித்தியின் கல்யாண விஷயம் தான் பேசப்படுகிறது என்று அவன் அறிந்திருந்தான். ஆனால் வீட்டுக்கு விரைவாகப் போவதே அவனுக்கு விருப்பமாயிருந்தது. சுற்றிலும் வேடிக்கை பார்க்க ஒன்றும் இல்லை.
அட! அவனுக்கு ஆச்சரியமாகவும் சந்தோஷமாகவும் இருந்தது.
தெரு ஓரத்தில் சற்றுத் தொலைவில் ஒரு நாய் குட்டிகளுடன் படுத்திருந்தது. குட்டிகள் ஒய்யாரமாக தாய் நாயின் வயிற்றில் சாய்ந்து படுத்திருந்தன. தாய் நாய் கண்ணை மூடியிருந்தாலும் குட்டிகள் விழிப்பாகவே இருந்தன. அந்த நாய்க் குட்டிகள் தன்னை மிகவும் அலட்சியமாக நோக்குவதாக கோபுவுக்குப் பட்டது. தாங்கள்அருகில் நிற்பது பற்றிய உணர்வின்றி அவை திமிர்தனமாக நின்ற மாதிரி அவனுக்குத் தோன்றியது. அது தனது கெளரவத்தை பாதிப்பதாகவும் அவன் நினைத்தான். எதாவது செய்ய வேண்டும். அவன் சுற்றும் முற்றும் பார்த்தான். கதைப்பராக்கு என்றாலும் அம்மம்மா கையை இறுகப் பிடித்திருந்தது அவனுக்கு இடைஞ்சலாக இருந்தது. ஒன்றும் செய்ய முடியாது. காலடியை நோக்கினான். சிறுகற்கள் தான் இருந்தன.
குனிந்து ஒன்றை எடுத்தான். அம்மம்மாவின் பிடி தளரவில்லை. ஆனாலும் பரவாயில்லை.
நான்கு குட்டிகளுள் ஒன்று இப்போ தாயின் வயிற்றின் மீது ஏறி நின்ற காட்சி மிகவும் அழகாக இருந்தது. ஆனாலும் அது “உன்னால் இப்படி முடியுமா?” என்ற தோரணையில் அலட்சியப் பார்வை பார்த்தது கோபுவிற்குப் பிடிக்கவில்லை. மெதுவாக ஒரு கல்லை எறிந்தான். அவன் அந்த சின்னச் செயலை மட்டுமே செய்தான். அவ்வளவு தான் கண்ணை மூடியிருந்த தாய் நாய் ‘விலுக்’ கென்று நிமிர்ந்தது. ‘லொள்’......என்று கொண்டே பாய்ந்து வந்தது.
“ஐயோ!, நாய் தள்ளுங்கோ! அடீக்!” என்றவாறு கந்தையா மாஸ்டர் சைக்கிளை நாயை தடுக்கு முகமாக திருப்பி விட்டார்.
கோபு வெலவெலத்துப் போனான். அம்மம்மா சடாரென்று அவனைத் தூக்கியிருந்தாள்.
“என்னப்பன் செய்தனி....?” அம்மம்மாவின் குரலில் கடுமையிருந்ததை அவதானிக்க முடிந்தது.
“நான்... கல்” கோபுவால் பேசமுடியாதவாறு அதிர்ச்சியாக இருந்ததது. அம்மம்மா அணைத்துக்கொண்டாள்.
“அது குட்டிபோட்ட நாயெல்லே. அதுக்கு எதாவது செய்தால் குட்டிக்குத்தான் ஏதோ செய்கினம் எண்டு எங்களை தான் கடிக்கும்” அம்மம்மா சொன்னார்.
“குட்டி போட்ட நாயிட்ட வலு கவனமாக இருக்கோனும் தம்பி. நாங்கள் கனநேரமாகக் கதைச்சது தம்பிக்கு போரடிச்சுப் போச்சுப் போல, கதிகலங்க வைச்சுட்டானே”..... கந்தையா மாஸ்டர் கோபுவின் கன்னத்தில் தட்டி விட்டு சைக்கிளில் ஏறினார்.
“ஓமோம்.. பிறகு ஆறுதலாகக் கதைப்பம். சொன்னதை மறந்து போயிடாதையுங்கோ” அம்மம்மா விடைபெற்றார்.
ஓமோம். அதெல்லாம் நான் பார்த்து செய்யிறன். அப்ப வாங்கோ” கந்தையா மாஸ்டர் போய்விட்டார்.
“கோபுவிற்கு இண்டைக்கு என்ன வந்தது? றோட்டிலை குழப்படி செய்ததை அப்பாட்டை கட்டாயம் சொல்ல வேணும்” அம்மம்மா கூறிக்கொண்டே அவனை இறக்கி விட்டாள். கோபு திரும்பிப் பார்த்தான். தாய் நாய் சுற்றும் முற்றும் பார்த்து தனதும், குட்டிகளினதும் பாதுகாப்பை உறுதி செய்து கொண்டது. குட்டிகள் தாய்க்கு கீழே நின்றன. இன்னும் திமிராகப் பார்த்தன. கோபுவுக்கு அவமானமாய் இருந்தது. ஆனாலும் ஒன்றும் செய்ய முடியாது.
வீட்டில் எதிர்பார்த்தளவு நிலமை மோசமில்லை. விடயத்தை அம்மம்மா சொல்ல “ஏன் கண்ணா?...” என்று சித்தி பின்பக்கத்தில் செல்லமாகத் தட்டினாள்.
“தம்பிக்கு குழப்படியள் கூடிப்போச்சு...” என்றதுடன் அம்மா நிறுத்திக்கொண்டாள். அவனுக்கு அப்பாடா என்று இருந்ததது. அப்பா பின்னேரம் தான் வருவார் முன்னம் ஊதி ஊதி மண்ணெண்ணையில் ஓடுகிற மோட்டார் சைக்கிளில் தான் வேலைக்குப் போகிறவர். இப்ப அவரை ‘பிக்-அப்’ ஒன்று வந்து ஏற்றிக்கொண்டு போகும். போகும் போதும் வரும்போதும் தெருவில் பெரிய தூசிப் படலமே கிளம்பும்.
பக்கத்து வீட்டு ராஜனும் பள்ளிக்கூடத்தால் வந்துவிட்டான். ஆனால் அவன் இன்னும் விளையாட வரவில்லை. இது கோபுவுக்கு பெரும் விசராக இருந்தது. ‘அவன்ர அம்மா ஏதோ பேசிப்போட்டா போல’ கோபு நினைத்துக்கொண்டான். அவனுக்குத் தெரியும்: “கழுதை, எருமைமாடு, மூதேவி” என்றெல்லாம் ராஜனை அவனது அம்மா ஏசுவது இங்கே கேட்கும். ஏன் என்ற காரணம் கோபுவுக்குத் தெரியாது. ஏச்சு விழுந்த காரணத்தை ராஜன் சொன்னால், தான் செய்யும் குழப்படிக்கு எப்படியான ஏச்சு விழும் என்று நினைக்கவே கோபுவுக்கு உடம்பு சிலிர்க்கும்.
கோபுவின் அம்மா அப்படி அல்ல. கோபு தனது அம்மாவின் கண்களுக்குள்ளேயே எல்லாவற்றையும் கண்டுகொள்வான். தாயார் ஒரு பார்வை பார்த்தால் காணும். அதுவும் இல்லையென்றால் கிட்டத்தில் அணைத்துக்கொண்டு முகத்தோடு முகம் வைத்து “இனி இப்படிச் செய்யாதையுங்கோ” என்றால் பிறகு கோபு அப்படியான குழப்படியைச் சிந்தித்தும் பார்ப்பதில்லை.
அன்று பின்னேரமும் ராஜன் வரவில்லை. கோபுவுக்குச் சலிப்பாக இருந்தது. “அப்பன்! நாங்கள் கோழிக்குஞ்சு அடைப்பம் வாங்கோவன்” அம்மம்மா அழைத்தாள். கோபுவுக்கு உற்சாகமாக இருந்தது. வீட்டிற்குப் பின்னால் போனார்கள்.
“பா....பா...........” அம்மம்மாவுடன் தானும் சேர்ந்து கத்தினான். முதலில் தாய்க்கோழி வந்தது. புற்களுக்குள் இருந்து அம்பாய் குஞ்சுகள் புறப்பட்டு வந்தன. அரிசியைத் தூவினார்கள்.
“கோபு அந்தக் கூட்டை எடுங்கோ” – அம்மம்மா சொன்னார். கூட்டை மெதுவாக சரித்துப்பிடித்தபடி குஞ்சுகளை உள்ளுக்கு விரட்டினார்கள். ஒரு குஞ்சு வெளியால் பாய்ந்தது. கோபு உற்சாகமாய்ப் பிடிக்கப் போனான். “கோழி கொத்தப் போகுது விடுங்கோ” என்று அம்மம்மா சொல்வதற்குள் விநோதமான ஒலியை எழுப்பியபடி கோழி சிலிர்த்துக் கொண்டு வந்தது. வெடுக்கென்று கோபுவின் கையில் கொத்தியது. “நான் சொன்னன் பார்த்தீங்களா....” அம்மம்மா எல்லாவற்றையும அப்படியே விட்டுவிட்டு அவனிடம் ஓடி வந்தாள். கோபுவுக்கு வலித்தது. ஆனால் அழுவதில் உடன்பாடு இல்லை. ஆனாலும் கண்களில் நீர் முட்டி விட்டது. மண்ணுக்குள் சரிந்து விழுந்ததில் மண் எல்லாம் உடம்பில் அப்பிக்கொண்டது. அம்மம்மா கோபுவைத் தூக்கி மண்ணைத் தட்டி விட்டாள். ஆரவாரம் கேட்டு முன்பக்கம் கதைத்துக்கொண்டிருந்த அம்மாவும் பக்கத்து வீட்டு அன்ரியும் வந்தார்கள்.
“இவனையும் ஏனம்மா விட்டனீங்கள்?” அம்மம்மாவை அம்மா கடிந்துகொண்டாள்.
“சரி சரி! நீங்கள் அடையுங்கோ. இவனுக்குமேல் கழுவி விடோணும். மேலெல்லாம் சேறு” – அம்மா கிணற்றடிக்கு கூட்டிச் சென்றாள்.
பக்கத்து வீட்டு அன்ரியும் நின்றது கோபுவுக்கு வெட்கமாக இருந்தது.
“என்ன கோபு அழுதவரோ?” – அன்ரி கேட்டார்.
“சீச்சீ, இல்லை” – கோபு அவசரமாகப் பதில் சொன்னான். கையில் காயம் எதுவும் இல்லையாயினும்அவனுக்கு வலித்தது.
கிணற்றடியில் உடம்பு கழுவும் போது மீண்டும் அதே கேள்வி கோபுவுக்கு எழுந்தது.
“அம்மா எங்கடை ஆறாவது அறிவு என்றால் என்ன?” அம்மாவுக்கு கேள்வி வியப்பாக இருந்தது.
“யாரப்பன் இதெல்லாம் சொல்லித் தந்தது?” – அம்மா கேட்பதற்குள் கேற்றடியில் ‘பிக்-அப்’ வரும் ஓசை கேட்க சம்பாஷணை குழம்பியது.
இரவு அப்பாவிடம் கேட்டான்.
“அப்பா கோழிக்குஞ்சு பார்த்திட்டு வருவமே”.
“இப்ப இரவிலேயோ?” அப்பா.
“குஞ்சுகள் எப்படி நித்திரை கொள்கிறது எண்டு பாப்பம் அப்பா” என்றான் கோபு.
“சரி வாங்கோ” – என்று அப்பா ரோச்சையும் எடுத்துக்கொண்டு வந்தார். கோழிக்கூட்டு இடுக்கு வழியாக கோபு பார்த்தான். ஒரு குஞ்சையும் காணவில்லை. தாய்க்கோழி கொக்.. கொக்…. என்றது. பின்னர் கொஞ்ச நேரத்தில் ஒவ்வொரு குஞ்சாக கோழியின் இறக்கைக்குள் இருந்து எட்டிப்பார்த்தன. ஒரு குஞ்சு வெளியால் வந்து தாய்க் கோழி மேல் தாவி ஏறியது. ரோச் வெளிச்சத்தில் அவற்றுக்கு கண் கூசியது போலும். கண்ணை மூடி மூடி திறந்தன. கோபுவுக்கு தன்னைப் பார்த்து நக்கலாகக் கண்ணடிப்பது போல் தோன்றியது. கோழி கொத்திய கையைத் தடவிக்கொண்டான்.
“பார்த்தது காணும் வாங்கோ போவம்” அப்பா தூக்கிக் கொணடார்.
“ஆட்டின்ர குட்டியை நாங்கள் பிடிச்சாலும் ஆடு இடிக்குமோ அப்பா?” – கோபு கேட்டான்.
“ஓமப்பன். எல்லா மிருகங்கள், பறவைகள் எல்லாம் தங்கட குட்டியளைக் கவனமாகப் பாதுகாக்கும். அதுகளின்ரை குட்டிக்கு ஏதேனும் செய்தால் எங்களுக்குத்தான் அதுகள் அடிக்க வரும்” அப்பா சொன்னார்.
“”அப்ப அதுகளுக்கு ஐந்தறிவு தானே?” – கோபு கேட்டான். அப்பா ஓம் என்று தலையாட்டினார்.
“அப்ப எங்களுக்கு ஏன் ஆறறிவு?” – கோபு தீவிரமாகக் கேட்டான்.
“அவர் இப்ப ஆறறிவு ஆராய்ச்சியிலை இறங்கவிட்டாரோ. இப்ப சாப்பிட வாங்கோ. பேந்து ஆராயலாம்” – அம்மா அழைத்தாள். இரவு படுக்கும் போது இந்தக் கேள்வி நினைவு வந்தாலும் காலையில் கேட்கலாம் என்ற நினைவில் கோபு தூங்கிப் போனான்.
காலை எழுந்த போது வீட்டில் ஆளரவம் இல்லாதது கோபுவுக்கு ஆச்சரியமாக இருந்தது. “குட்மோனிங்” சொல்ல சித்தியையும் காணவில்லை. வீட்டின் முன்னாலும் ஒருவருமில்லை. தெருவில் ஆளரவம் அதிகமாக இருந்ததை கோபு உணர்ந்தான். அந்தத் தெருவிலுள்ள ஷெல்லடியால் இடிந்து போன வீட்டின் முன் பலர் குழுமி நின்றார்கள். கோபு கேற்றடியில் நின்றே “அம்மா! அம்மா” என்று அழைத்தான். அம்மா விரைந்து வந்து தூக்கிக்கொண்டு திரும்பவும் அதே வீட்டிற்கே சென்றாள். அண்மித்த போது தான் கோபுவால் அந்த ஒலியை உணர முடிந்தது. “குவா... குவா...” என்று ஒரு குழந்தை அழும் சத்தம் கேட்டது. அம்மாவின் மேலிருந்தவாறே கூட்டத்திற்குள்ளால் எட்டிப் பார்த்தான். அட! சரியான சின்னக் குழந்தை, இப்ப தான் பிறந்த மாதிரி அவ்வளவு சின்னனாக இருந்தது.
“இஞ்சை தள்ளுங்கோ பொலீஸ் வருகுது” – யாரோ கத்தினார்கள்.
கோபு திடுக்கிட்டுப் போனான் “ஏன் பொலீஸ்?” – அவன் கேள்வியை அம்மாவே கவனித்த மாதிரி தெரியவில்லை.
“எந்தப் பாவி இப்படி விட்டிட்டுப்போனாளோ?” – பக்கத்து வீட்டு ஆச்சி முனகினாள்.
“இதுகளுக்கெல்லாம் என்னண்டுதான் மனம் வருகுதோ?” – இது பாக்கியம் மாமி
அம்புலன்ஸ் வந்து குழந்தையை ஏற்றிக்கொண்டு போனது. அதனது அழுகை கோபுவை என்னவோ செய்தது. எல்லோரும் பலவித விமர்சனங்களுடன் கலைந்து போனார்கள். அம்மா கோபுவை அணைத்தாவாறே நடந்தாள்.
“இந்த பபாவின்ரை அம்மா எங்கயம்மா?” – கோபுவின் குரல் உடைந்திருந்தது.
“அவ எங்கேயோ போயிட்டாவாம்” – அம்மா
“ஏன் – விம்மலுடன் வந்தது கேள்வி. அம்மா இன்னும் இறுக அணைத்துக்கொண்டாள்.
“அவவிற்குப் பிடிக்கல்லையாக்கும்” – அம்மா சமாளித்தாள்.
“இனி இந்த பபாவை என்ன செய்வினம்?” – கோபு கேட்டான். அம்மாவுக்கும் குழப்பமாக இ்ருந்தது. ஆனாலும் சொன்னாள்.
“யாரும் பபா வேணுமெண்டால் குடுப்பினம்.
அப்படி ஒருதரும் வராட்டில்....?” – இது கோபு.
“என்னப்பன் நீங்கள்” அம்மாவிற்கும் அழுகை வந்த மாதிரி இருந்தது.
“கட்டாயம் யாராவது வருவினம். நீங்கள் நேசறிக்கு வெளிக்கிடோணுமில்லே” – அம்மா பேச்சை மாற்றினாள்.
கொஞ்ச தூரம் வரை கனதியான மெளனம் நீடித்தது. கோபு அம்மாவின் தோளில் சாய்ந்து படுத்திருந்தான். அவனுக்குள் பல சிந்தனைகள். தொண்டைக்குள் ஏதோ அடைத்தமாதிரி இ்ருந்தது. கண்ணை இறுக மூடிக்கொண்டான். அவன் நினைவில் நேற்றைய நிகழ்ச்சிகள் தோன்றின. நாய்க்குட்டி தாயின் மேல் சாய்ந்து கொண்டு திமிராகப் பார்த்தது. கோழிக்குஞ்சு கண்ணடித்து நக்கலாய்ப் பார்த்தது. அவனது கண்ணால் நீர் வடிந்தது. சட்டென்று நிமிர்ந்து கோபு தாயிடம் கேட்டான் “ஓ... இது தான் அந்த ஆறறிவோ?”
கேள்வியால் மிகவும் அதிர்ந்து நிமிர்ந்து நோக்கினாள் அந்தத் தாய்……. தன் சேயை……!

Wednesday, August 13, 2008

முதுமை


முதுமை குறித்தான நூலொன்றை அண்மையில் பார்க்கும் வாய்ப்புக்கிடைத்தது. உலகில் பொதுவாக அதிகரித்துள்ள குடும்பநல வசதிகள் காரணமாகவும் விஞ்ஞான முன்னேற்றங்கள் காரணமாகவும் மனிதரின் எதிர்பார்க்கப்படும் ஆயுட்காலம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக உலகில் முதியோரின் எண்ணிக்கையும் வேகமாக அதிகரித்து வருகின்றது.


எனவே முதியோர் குறித்தான ஆய்வுகளும் தற்போது மேற்கொள்ளப்படுகின்றன. இந்த வகையில் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த இந்தநூல் என்னை ஆச்சரியப்படவைத்தது. முதுமை என்பது சர்வதேச ரீதியில் அணுகப்படத்தக்க ஒரு எண்ணக்கருவாக இருப்பினும் யாழ்ப்பாணச்சூழலை மையமாகவைத்து இந்தப்புத்தகம் முதுமை குறித்து ஆராய்வது காலத்தின் தேவை கருதிய பணி.



ஏனெனில் தொடர்ந்து வரும்போரால் இளம்சந்ததிகள் போரிட்டு மடிந்துபோகவும் எஞ்சியோர் புலம்பெயர்ந்து வெளிநாடுகளுக்குப்போகவும் யாழ்ப்பாணத்தில் எஞ்சியிருப்போர் முதியோர்களே.



எனவே இவர்கள் குறித்தான உளவியல் உடலியல் ஆய்வுகள் பிரதானமானது. அத்துடன் இப்போது யாழ்ப்பாணத்திலுள்ள முதியோர்கள் யாழ்ப்பாணத்தின் பல்வேறு பட்டகாலங்களில் ஏற்பட்ட அரசியல் சமூகமாற்றங்களுக்கூடாக வந்தவர்கள். இவ்வாறான மாற்றங்களின் இன்றையநிலை இவர்களுக்கு சலிப்பும் விரக்தியுமான ஒன்றாகவேயிருக்கும்.



பொதுவாக மனிதவாழ்வில் 40-45 வயதை தாண்டியவர்கள் தங்களை முதியவர்களாக எண்ணத்தலைப்படுகின்றார்கள். இதற்கு உடலில் ஏற்படும் மாற்றங்களும் (தலைநரைத்தல் உயர்குருதி அழுத்தம் போன்றன) உள்ளத்தில் ஏற்படும் மாற்றங்களும் (பிள்ளைகள் பெரியவர்களாக வளர்வது, தந்தை தாய் இறப்பு) காரணமாக அமைகின்றன.



எனவே இந்த வயதெல்லையிலேயே மனிதர்கள் சட்டென்று ஒரு 'பிறேக்' போட்டு சிந்திக்க தலைப்படுகிறார்கள். (விவேக் ஒரு படத்தில் சொல்வது போல.. 'அடடா நமக்கு ஏஜாகிப்போச்சா..')



இதன்காரணமாக இந்தவயதெல்லையில் பொதுவாக நடத்தைப்பிறழ்வுகள் ஏற்படுவதுண்டு. தாம் பின்பற்றி வந்த கொள்கைகள் வெற்றியளிக்காமை, 'எல்லாம் பின்னால் சரிவரும்' போன்ற சமாதானங்களுக்கான எல்லையாகவும் இந்தவயதெல்லை காணப்படுகின்றது.



இதனாலேயே நல்லவராக இருந்த சிலர் கெட்டவராக மாறுவதும் கெட்டவராக இருந்த சிலர் நல்லவராக மாறுவதும் நிகழ்கிறது. அத்துடன் ஆன்மீக நாட்டமும் அதிகரிக்கிறது. மேலும் பணியிலிருந்து ஓய்வுபெறும் வயதெல்லையும் இவர்களை முதியவர்களாக சிந்திக்கவைக்கிறது.



ஆயினும் பொதுவாக 60 வயதுக்கு மேற்பட்டவர்களே உண்மையில் முதியவர்களாக கணிக்கப்படுகிறார்கள். இந்த வயதுகளில் உடற்கலங்கள் படிப்படியாக சிதைவடைந்து போவதைப்போலவே உள்ளமும் இறப்பை நோக்கியதான ஒரு தயார்படுத்தலுக்கு உள்ளாகிறது.



இளையவரும் ஒருநாள் முதியவர்களாவார் என்பதையுணர்ந்து முதியவர்களின் ஆரோக்கியமான முதுமைவாழ்விற்கு உதவிடவேண்டும்.



"முயற்சிக்காமல் கிடைப்பது முதுமை மட்டுமே.."

Tuesday, July 22, 2008

தென்கிழக்காசிய வேங்கை - தென்கொரியா - 02

தென்கொரியா பெளத்தமதம் சார்ந்த நாடாக இருந்தபோதும் 46 வீதத்திற்கும் கூடுதலானவர்கள் எந்தமதத்தையும் சாராதவர்களாகவே இருக்கிறார்கள். விண்ணப்பப்படிவங்களில் கூட 'எந்த மதத்தையும் சாராதவர்..' என்ற தெரிவும் தரப்பட்டிருக்கும்.



30 வீதமானவர்கள் பெளத்தர்களாகவும் 15 வீதமானவர்கள் கிறிஸ்தவர்களாகவும் இருக்கிறார்கள். 50000 பேர்வரை முஸ்லிம்களாகவும் இருக்கிறார்கள்.
(படம் - கொரிய மயானம்)
மதநிகழ்வுகளில் மக்கள் பங்களிப்பு குறைவாக இருக்கும். வெசாக்குடன் வரும் ஊர்வலத்தில் இலங்கை பெரஹராவை ஒத்தஊர்வலங்கள் நடைபெறும்.

அரசியல் குறித்தும் பெரும்பாலானவர்கள் அலட்டிக்கொள்வதில்லை. அதற்கு அவர்களுக்கு நேரமும் இருப்பதில்லை. தற்போதய ஜனாதிபதி திரு.லீ மியுன் பக் அவர்கள் வேட்பாளராக இருந்தபோது கொரியாவின் ஹீண்டாய் நிறுவன ஊழல் வழக்கொன்றில் சம்பந்தப்பட்டிருந்தார். ஆனால் அதையும் மீறி மக்களால் அவர் தெரிவுசெய்யப்பட்டார். அதன்பின்னர் நீதிமன்றம் அந்த வழக்குகளில் இருந்து அவரை விடுவித்தது.



தேர்தல் பிரச்சாரங்கள் அமைதியாகவும் நாசூக்கான முறையிலும் செய்யப்படும்.
(படம்- வீதியோரத்தில் தேர்தல் பிரசாரம்)
பொதுவாக மேடையுடன் கூடிய வாகனம் ஒன்றில் வேட்பாளர் மக்கள்கூடும் சந்திகளில் உரையாற்றும்போது சீருடையணிந்த பெண்கள் அவருக்கு ஆதரவாக கோஷமிடுவார்கள். சுவரொட்டிகள் மற்றும் பதாதைகள் நகரசபையால் ஒதுக்கப்பட்ட இடங்களில் மட்டுமே காட்சிப்படுத்தப்படும்.



கொரியர்களின் பாரம்பரிய உடை யப்பானியர்களின் கிமோனோ உடையை சிறிதளவு ஒத்தது. ஆயினும் இவ்வாறு பாரம்பரிய உடைகளை அணிபவர்களின் எண்ணிக்கை மிகக்குறைவு என்று சொல்லலாம். இளைய தலைமுறையினர் பெரும்பாலும் அமெரிக்கபாணியிலான நாகரிகங்களிலேயே ஆர்வம் காட்டுகிறார்கள்.
(படம் - கொரிய பாரம்பரிய உடை)




கொரியாவில் சாதாரணமாக விருந்துகளும் கதிரையில் இருக்காமல் நிலத்தில் தலையணை போன்ற திண்டின்மீது உட்கார்ந்தே விருந்து உண்பார்கள். விருந்தில் மதுவும் மாமிசமும் பிரதானமானது.
(படம் - கொரிய விருந்து)




போர் ஒரு முடிவுக்கு வந்தாலும் எல்லையில்காணப்படும் பதற்றத்தை காரணம்காட்டி அமெரிக்கத்துருப்பினர் 24000 வரையானவர்கள் தற்போதும் கொரியாவில் தங்கியிருந்து கொரியஇராணுவத்துக்கு உதவிவருகின்றனர். இதனால் கொரியா பல சங்கடங்களுக்கும் நிபந்தனைக்கும் ஆளாகிவருகிறது.

அமெரிக்க இராணுவத்தினருக்கென நெற்காணிகள் சுவீகரிக்கப்பட்டன. உள்ளுர் சந்தைவிலைகளைவிடவும் குறைவான விலையில் மாட்டிறைச்சியும் அரிசியும் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றது.



அரசின் இவ்வாறான நடவடிக்கைகளுக்கு எதிராக மக்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.
(படம் - 18ம் நூற்றாண்டு அரச அரண்மனை)
அண்மையில் அரசால் சுவீகரிக்கப்பட்ட தனது காணிக்கு நட்டஈடு கிடைக்காததால் வெகுண்ட வயோதிபர் ஒருவர் புராதன மேற்குவாயில் என்று அழைக்கப்டும் வரலாற்று மரக்கட்டடம் ஒன்றிற்கு தீவைத்து அக்கட்டடம் முழுமையாக எரிந்து நாசமானது.



கோடை, மழை, குளிர், வசந்தம் என்ற நான்கு காலநிலைகள் காணப்படுகின்றன. குளிர்காலமே இதில் அதிகம். கடும்குளிர் காரணமாக பொலிதீன் கூடாரங்களுக்குள்ளேயே பயிர்ச்செய்கை நடைபெறுகிறது. கோடைகாலத்தில் நெல்விதைப்பு இடம்பெறும். ஒப்பீட்டளவில் விவசாயிகள் வருமானம் குறைந்தவர்களாகவே இருக்கிறார்கள்.




தலைநகரம் சோலில் (Seoul) பார்க்கவேண்டிய இடங்களாக பல நிறுவப்பட்டுள்ளன. கடல் மட்டத்திலிருந்து 365மீற்றர் உயரமான சோல் ரவரிலிருந்து சோலை நாலாபக்கமும் தொலைநோக்கிமூலமும் கண்டுகளிக்கலாம். மலைஒன்றில் அமைக்கப்பட்டுள்ள இந்த கோபுரத்தின் அடிப்பகுதிக்கு கேபிள் கார் மூலம் செல்லலாம்.



இந்த கோபுரத்தின் அடிவாரத்தில் காதலர்களின் பெயர்கள் எழுதிய பூட்டுக்களை பூட்டி விட்டால் காதலர்கள் பிரியாமல் இணைந்திருப்பார்கள் என்று நம்புகிறார்கள்.

டிஸ்னிலாண்ட் ஐ ஒத்த Lotteworld. Seoul land, Dream land, Everland என்று பல கேளிக்கை பூங்காக்கள் உள்ளன.


Coex Aquarium மற்றும் 63city என்பவற்றில் கடல்வாழ் உயிரினங்களை நேரடியாக இராட்சதநீர்த்தொட்டி குகைகளில் காணமுடியும். தலைநநகரின் மத்தியில்ஓடும் ஆறான Han river என்பதில் 'ஜொய்னாறு' எனுமிடத்தில் கேளிக்கை படகுசவாரி செய்வதனூடாக இரவில் சோலின் அழகை இரசிக்க முடிவது இனிமையான அனுபவம்.



கோடைகாலத்தில் புகழ்பெற்ற கடற்கரையாக 'ஹியுந்தே' கடற்கரை விளங்குகிறது. இது பூசான் எனுமிடத்தில் தலைநகரிலிருந்து ஆறுமணிநேர பயணதொலைவில் உள்ளது. இவற்றை தவிர கொரிய கலைகலாசாரத்தை விளக்கும் நூதனசாலைகளும் தாவர மற்றும் மிருக காட்சிசாலைகளும் உல்லாசப்பயணிகளை கவருமிடங்களாக உள்ளன.

Yongsan, Technomart என்பவை பெரிய இலத்திரனியல் வர்த்தக நிலையங்களாகவும் Dongdamun, Namdamun என்பவை பிரத்தியேகமாக வெளிநாட்டினரை கவரும் பிரபல சந்தைகளாகவும் விளங்குகின்றன.


சோல் நகரசபையினர் பிரகடனப்படுத்திய 'Hi Seoul..! - Soul of Asia' என்ற மகுடவாக்கியம் இங்கு குறிப்பிடத்தக்கது.

Tuesday, July 8, 2008

தென்கிழக்காசிய வேங்கை - தென்கொரியா - 01

கொரியா வரும்போதே நான் பயந்துகொண்டே வந்தது கொரிய உணவுகளை எண்ணித்தான். நாய் இறைச்சியும் சாப்பிடுவார்கள் என்று இலங்கையில் பயமுறுத்தியிருந்தார்கள். இங்கு வந்ததும் அது உறுதியாகிவிட்டதுமல்லாமல் வந்த இரண்டு மாதத்திலேயே அதில் ஒரு துண்டும் தவறுதலாக வாய்க்குள் போய்விட்டது.

கொரியமொழியில் 'கோகி' (Kogi) என்பது இறைச்சியை குறிக்கும். தக்கோகி - கோழியிறைச்சி, தேஜிகோகி - பன்றி இறைச்சி, கேகோகி - நாய் இறைச்சி. இதில் நான் உண்பது தக்கோகி மட்டுமே. ஆரம்பத்தில் கொரியமொழியில் எதைச்சொன்னாலும் உச்சரிப்பை விளங்கிக்கொள்ளுவதில் சிக்கல் இருந்தது.

இலங்கையில் அலுவலக கோப்புகள் மற்றும் கடிதங்களில் என்னை சுருக்கமாக விளிப்பது Mr.K. என்று.. ஆனால் கொரிய மொழியில் 'கே' என்பது நாயைக்குறித்ததால் விதியின் கொடுமையையும் நொந்துகொள்ள வேண்டியிருந்தது.

எமது நாட்டில் கோழிகளை வீட்டில் வளர்ப்பது போல இவ்விடம் நாய்களை இறைச்சி மற்றும் வளர்ப்பு நோக்கங்களுடன் வளர்க்கிறார்கள். நாய்ப்பண்ணைகள் கூட இருக்கின்றன. வீதியோரங்களில் இருக்கும் நாய்ப்பண்ணைகளிலிருந்து இரவுநேரத்தில் நூற்றுக்கணக்கான நாய்கள் கோரசாக குரைப்பது திகிலாக இருக்கும்.


கொரிய உணவில் பிரதான இடம் வகிப்பது 'கிம்ஜி' என்ற உணவு. Secret of our energy என்று கொரியர்கள் சொல்லுமளவுக்கு எல்லோரும் எல்லா வேளைகளிலும் சாப்பிடும் ஒரு ஆகாரம் அது.

'பெச்சு' என்று சொல்லப்படும் முட்டைக்கோஸ் போன்ற அடுக்கான இலைகளுக்குள் உப்பு, சீனி, மிளகாய் தூள், மிளகுத்தூள், நசுக்கிய வெள்ளைப்பூண்டு மற்றும் பெயர்தெரியாத வஸ்துக்களெல்லாம் போட்டு மரப்பானைகளுக்குள் போட்டு வீட்டுக்கு வெளியில் வைப்பார்கள்.

பின்னர் சில மாதங்கள் கழித்து!! மரப்பானைக்குள் இருப்பதை துண்டுகளாக்கி சோறுடன் (பப்) உண்பார்கள். இப்போது கிம்ஜியின் நாற்றம் எப்பிடி இருக்கும் என்பதை நீங்களே கற்பனை செய்து கொள்ளலாம்.

ஆசிய நாடென்றபோதிலும் தெற்காசிய உணவுமுறைகளிலிருந்து கொரிய உணவுவகைகள் இவ்வளவு தூரம் வேறுபடுவது வேறு ஒரு கிரகத்துக்கு வந்த உணர்வையே தந்தது.


5000 ஆண்டு பழைமைவாய்ந்த கொரியா இரண்டாம் உலக யுத்தத்திற்கு முன்னர் யப்பானால் ஆக்கிரமிக்கப்ட்டு பலத்த அடக்கு முறைக்கு ஆளாகியது. ஒரு லட்சம் பேர் பலவந்தமாக யப்பானிய இராணுவத்துக்கு சேர்க்கப்பட்டார்கள்.

மேலும் கொரியர்களின் பெயர்கள் கூட யப்பானிய முறையிலேயே வைக்கவேண்டும் என்று கட்டளையிட்டதுடன் பெருமளவிலான பொருளாதார சுரண்டல்களும் (குறிப்பாக கடல்வளங்கள்) யப்பானால் மேற்கொள்ளப்பட்டது. அத்துடன் கொரியப்பெண்கள் மீதும் வன்முறைகள் மேற்கொள்ளப்பட்டன. இதனால் இன்றும்கூட கொரியர்கள் யப்பானை வெறுப்பவர்களாகவே காணப்படுவதுடன் யப்பானிய உற்பத்திப்பொருள்களையும் நிராகரிக்கின்றனர்.

இரண்டாம் உலகமகாயுத்த முடிவில் யப்பான் அமெரிக்காவிடம் சரணடைந்ததால் கொரியாவின் ஒரு பகுதியை அமெரிக்காவும் இன்னொரு பகுதியை ரஷ்யாவும் ஆதிக்கம் செலுத்தின. இதனால் ரஷ்ய கொம்யூனிசம் சார்ந்த பகுதி வடகொரியா என்றும் அமெரிக்க முதலாளித்துவ கொள்கை கொண்ட பகுதி தென்கொரியா என்றும் 1950 - 1953 வரை நடந்த போரின்பின் எல்லைகள் வகுத்து பிரிக்கப்பட்டது.

போரின்போது வடகொரியாவுக்கு சோவியத் ஒன்றியமும் சீனாவும் ஆதரவளிக்க தென்கொரியாவுக்கு அமெரிக்கா ஆதரவளித்தது. இலட்சக்கணக்கானவர்கள் போரின்போது மாண்டார்கள். கடல்தாவரங்களை காயவைத்து உண்ணும் அளவுக்கு வறுமைதாண்டவமாடியது.

போர்பற்றி ஒரு கொரிய வயோதிபர் சொல்லும்போது 'அமெரிக்க இயந்திர துப்பாக்கிகளுக்கு முன்னால் கொத்து கொத்தாக சீன இராணுவத்தினர் மடிந்தபோதும் அவர்கள் வெறும் கட்டுத்துப்பாக்கி (shot gun) ஐ வைத்துக்கொண்டு அலை அலையாக வந்தார்கள் என்று சீன இராணுவத்தின் ஆட்தொகையும் அர்ப்பணிப்பும் பற்றி குறிப்பிடுகின்றார்.

போரின்கொடுமையால் இரண்டு கொரியாவுமே வறுமையடைந்தன. 1953 தொடக்கம் 1958 காலப்பகுதிகளில் தென்கொரியா அமெரிக்காவிடமிருந்து வருடாந்தம் 27 கோடி டொலர் பெறுமதியான உதவிகளை பெற்றுவந்தது. இது அக்காலப்பகுதி மொத்ததேசிய உற்பத்தியின் 15 வீதமாகும்.

(தென்கொரிய பாராளுமன்றம்)

1960 ஆம் ஆண்டு தென்கொரியாவின் மொத்ததேசிய வருமானம் சூடான் நாட்டு வருமானத்துக்கு சமமானதாக இருந்தது. அதன் பின்னர் இராணுவ தலைவர்களே ஆட்சி செய்தாலும் உலகயுத்தத்தின் பின்னர் ஏற்பட்ட உலகமயமாக்கலுக்கு ஏற்றவகையில் பொருளாதார கொள்கைகளை வளர்த்துக்கொண்டதன் காரணமாகவும் புவியியல் அரசியல் காரணங்களாலும் தென்கொரியாவுக்கு அமெரிக்க பிரித்தானிய உதவிகள் தாராளமாகக்கிடைக்க மாறிவந்த உலக ஒழுங்கில் தன்னை இணைத்துக்கொண்டு கொரியா வேகமாக முன்னேறியது.

இன்று உலகின் முதல்பத்து ஏற்றுமதி நாடுகளுக்குள் கொரியாவும் அடங்குகிறது. கொரிய நாணயமான 'வொன்' (won) உலகின் பன்னிரண்டாவது இடத்தைப்பிடித்துள்ளது.. மோட்டார்வாகன ஏற்றுமதியில் உலகின் ஐந்தாவது இடத்தை ஹீண்டாய் (Hyundai) மற்றும் கியா (Kia) நிறுவனங்கள் தக்கவைத்துள்ளன.

இது தவிர இலத்திரனியல், பொறியியல், கட்டடவியல், வேதியியல், உயிர்நுட்பவியல் போன்றவற்றிலும் இன்று முன்னணி பெற்று விளங்குகிறது. இலத்திரனியலில் லிதியம் கிறிஸ்ரல் டிஸ்பிளே (LCD) மற்றும் செல்லிடப்பேசி கணனி தொழிநுட்பத்தில் உலகின் முன்னணி நிபுணத்துவ நாடாகவும் மிளிர்கிறது.

(கொரியதலைநகரம் சோலின் [Seoul] ஒரு பகுதி )

யப்பானுடன் தென்கொரியா, தைவான், சிங்கப்பூர், ஹொங்ஹொங் ஆகியவை தென்கிழக்காசியாவின் நான்கு வேங்கைகள் என்று அழைக்கப்படுகின்றன. இந்நாடுகளின் பொருளாதார வளர்ச்சியை ஒரு 'அற்புதம்' (miracle) என்று வர்ணிக்கிறார்கள்.

தென்கிழக்காசியாவில் பசுபிக் சமுத்திரத்தில் கொரியாவிற்கு இருந்த புவியியல் அரசியல் பொருளியல் சந்தர்ப்பங்கள் யாவும் தெற்காசியாவில் இந்து சமுத்திரத்தில் இலங்கைக்கு இருந்தும் தொடர்ந்து வரும் இனமோதல்களால் இலங்கை அச்சந்தர்ப்பங்களை தவறவிட்டு வறுமையில் உழன்று கொண்டிருப்பது துரதிர்ஷ்டவசமானது.

பதிவு நீண்டுவிட்டதால் கொரிய கலாசாரம் மற்றும் பல விடயங்களை அடுத்த பதிவில் தருகிறேன்.