Monday, February 11, 2008

புலம்பெயர் ஈழ இரண்டாம் தலைமுறை

புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் தங்கள் பிள்ளைகளின் தமிழறிவு தொடர்பில் தற்போது ஒரு விழிப்புநிலை கொண்டுள்ளவராகக் காணப்படுகின்றனர்। தமது பிள்ளைகள் தமிழ் கற்கவேண்டும் என்பதிலும் தமிழ்க்கலைகளை கற்கவேண்டும் என்பதிலும் ஆர்வம் காட்டுகின்றனர்। நேற்றைய தினம் ஜேர்மனி நாட்டில் வியர்சன் நகரில் நடைபெற்ற தமிழ்திறன் இறுதிப்போட்டி இதற்கு நல்ல சான்றாகும்।
ஜேர்மனியின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் சுமார் 4500மாணவர்கள் முன்னைய போட்டிகளில் பங்குபற்றியது குறிப்பிடத்தக்கதாகும்। இது வரவேற்கத்தக்கதே।
ஆயினும் இப்பிள்ளைகள் இதன்மூலம் இருகலாசாரத்தளங்களில் வாழ நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள்। பொதுவாக தத்தமது புலம்பெயர் நாடுகளின் பாடசாலை கல்விக்கு மேலதிகமாக வாரத்தில் சிலநாட்களில் மாலைவேளைகளிலும் விடுமுறை தினங்களிலும் இத்தமிழ்ப்பாடசாலைகள் இயங்குகின்றன। தாம்கற்கும் பாடசாலைகளில் எற்கத்தக்க சிலவிடயங்கள் தமிழ்கலாசார ரீதியில் ஏற்கமுடியாததாகும் சந்தர்ப்பங்களில் மாணவர்கள் குழப்பமடையக்கூடும்। மேலும் தாம்வாழும் சூழலைவிட பிறிதொரு கற்பனையான சூழல் குறித்தான அவர்களது கல்வி சிலவேளைகளில் அவர்கட்கு நம்பிக்கையீனத்தை தோற்றுவிக்கக்கூடும்। இந்நிலையில் தமிழ்பாடசாலை கல்விக்கு மேலதிகமாக பெற்றோரும் புரிந்துணர்வுடன் பிள்ளைகளின் உளச்சிக்கலை நீக்குமுகமான அனுசரணையாளர்களாகச் செயற்படவேண்டும்। முக்கியமாக இதற்கு பெற்றோர் பிள்ளைகளுடன் வீட்டில் இருக்கும் நேரத்தை அதிகரித்துக்கொள்ள வேண்டும்।
சுவிஸில் வெளியிடப்பட்ட குறுந்திரைப்படம் ஒன்றில் சித்தரிக்கப்பட்ட விடயம் ஞாபகம் வருகிறது। அதில் பெற்றோரது வேலைத்தளப்பளு விபரிக்கப்படுகிறது। அவர்களது பிள்ளை பாடசாலையால் வந்து வீட்டின் முன்னால் இருந்து கொண்டு அடுத்த வீட்டில் விளையாடிக்கொணடிருக்கும் வேற்றின சிறுவர்களின் விளையாட்டை ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டிருக்கிறது। நேரங்கழித்து பெற்றோர் திரும்புகிறார்கள்। தகப்பனார் குழந்தையின் ஏக்கம் நிறைந்த முகத்தால் கவலையடைந்து தாயிடம் சொல்கிறார்... 'குழந்தை பாவம்॥ நான் இங்க உழைக்கிறன்॥ நீ குழந்தையை ஊருக்கு கொண்டுபோய் படிப்பி॥' தாய் ஆக்ரோஷமாக... 'நான் இங்க நஷனாலிட்டி எடுத்து கொஞ்ச காசோட தான் ஊருக்குப்போறதெண்டால் போவன்...'
இதில் நியாயப்படுத்தல்கள் இருந்தாலும் இந்த 'கொஞ்ச காசு' என்பதன் வரையறை என்ன..? இலங்கையின் வளர்ந்து வரும் வாழ்க்கைச்செலவிலும், இலங்கையின் தமிழர் பிரதேசங்களின் நிலையான!? சொத்துக்களுக்கான (காணி, வீடு,கடைகண்ணி॥!) அதிகரித்த கேள்வியும் இந்த 'கொஞ்ச காசு' என்பதை முடிவிலி ஆகவே ஆக்கும்... இந்நிலையில் அக்குழந்தை.....??

No comments: