Friday, May 30, 2008

உலகவலம் வரும் Charice Pempengco

Charice Pempengco - பிலிப்பீன்ஸ் நாட்டை சேர்ந்த இச்சிறுமி இன்றைய சர்வதேச இசை உலகில் கலக்கிக்கொண்டிருக்கிறார். பலரையும் வியப்பில் ஆழ்த்தியது இந்தச்சின்ன வயதில் இவரிடம் இருந்து வரும் மிக முதிர்ச்சியடைந்த குரல்(Matured voice) அத்துடன் மேடைகளில் உணர்ச்சிகரமாகப்பாடும் தன்மையும் (Passion) மேடைகளில் தோன்றும்போதுள்ள கம்பீரமும் ஸ்டைலும் இவருக்கு ரசிகர்கள் பலரை உருவாக்கித்தந்துள்ளது.


10.05.1993 இல் பிலிப்பீன்சில் பிறந்த இவரது தாயாரும் ஒரு பாடகியே. தாயாரிடம் இருந்தே இசை நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டதாகக் குறிப்பிடும் இவரது வெற்றி இலகுவாக வந்ததல்ல. சிறு வயது முதலே இசை நிகழ்ச்சிகளில் பங்குகொண்டபோதும் பின்னர் தொலைக்காட்சிகளால் நடாத்தப்படும் போட்டி நிகழ்ச்சிகளால் ஈர்க்கப்பட்டு பிலிப்பின்சின் பிரபல தொலைக்காட்சி ஒன்றின் Little Big Star Season 1 என்ற போட்டி நிகழ்ச்சியில் பங்குபற்றினார். அதில் இறுதிச்சுற்று வரை முன்னேறியிருந்தும் நடுவர்கள் இவருக்கே கூடிய புள்ளிகளை வழங்கியிருந்தபோதும் பார்வையாளர்களின் வாக்குகளை அதிகமாகப்பெறத் தவறியதால் தோல்வியடைந்தார்.


ஆனாலும் இந்த தொலைக்காட்சி இசைப்போட்டியில் இவர் பாடிய Whitney Houston என்பவரின் I Will Always Love You என்ற பாடல் YOU TUBE என்கின்ற இணைய வீடியோ சேவைமூலம் ரசிகர்களால் பார்க்கப்பட்டு மிகவும்பிரபலமானது. இதிலிருந்து அதிர்ஷ்டகாற்று இவர்பக்கம் வீச ஆரம்பித்தது. இதன் ஒரு கட்டமாக 2007 யூன் மாதம் இவர் சுவீடனுக்கு அழைக்கப்பட்டு இவரது ஏழு பாடல்கள் அடங்கிய குறுவட்டு சுவீடனில் வெளியிடப்பட்டது.


இது இவரை மேலும் பிரபலமாக்க 2007 ஒக்ரோபர் மாதம் கொரியாவில் மிகவும் பிரபல தொலைக்காட்சி வலைப்பின்னல் சேவை ஒன்று தங்களின் STAR KING போட்டி நிகழ்ச்சிக்காக இவரை அழைத்திருந்தது. இந்நிகழ்ச்சியில் இவரது பாடும் திறமை அனைவரையும் ஆச்சரியத்திலாழ்த்தி திக்குமுக்காடச் செய்ததுடன் பாராட்டு மழைகளும் வந்து குவியத்தொடங்கின. இந்தத் தொலைக்காட்சி சேவையின் குறித்த நிகழ்ச்சி அமெரிக்காவின் பிரபல தொலைக்காட்சிகளிலும் மறுஒளிபரப்பு செய்யப்பட்டு மிகுந்த பாராட்டைப்பெற்றது.



இதனால் மிகவும் புகழ்பெற்ற இவர் அமெரிக்காவின் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஒன்றான Ellen DeGeneres Show எனும் நிகழ்வுக்கு அழைக்கப்பட்டார். இதில் இவரது இசைத்திறமை பார்வையாளர்களை மெய்சலிர்க்க வைத்து பாராட்டு மழையில் நனையவைத்தது. இன்று Yahoo online தரப்படுத்தலில் மூன்றாவது நிலையில் இருக்கும் அளவிற்கு இவரை, இவரது விடாமுயற்சியும் உழைப்பும் தன்னம்பிக்கையும் திறமையும் ஈடுபாடும் கொண்டுவந்துள்ளது.

Saturday, May 17, 2008

தேவாரமும் நானும்

சிறுவயதில் தேவாரம் பாடமாக்குதல் என்பது மிகப்பெரிய சவால்। கோவில்களில் தேவாரம் பாடினால் தான் கடவுள் வரம் தருவார் என்றும் சொல்லப்பட்டது। 'சொற்றுணை வேதியன்॥' பாடும்போது கல்லைக்கட்டி கடலில் போட்டபோது அவர் பாடியதை சும்மா நின்று கும்பிட்டுக்கொண்டிருக்கும் நான் ஏன் பாடவேண்டும் என நினைத்த காலங்களும் உண்டு। (கல்லைக்கட்டி கடலில் போட்டாலும் எமக்கு இன்னும் அதையொத்த துன்பங்கள் இருக்கின்றன என்று வாதிடுவது வேறு)।

அந்தக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் கடுமையான பொருளாதாரத்தடை இருந்தது। மின்சாரம் இல்லை। உடுப்புத்தோய்ப்பது பனங்களியில்। மோட்டார் சைக்கிள்கள் பெற்றோல் சிறுதுளிவிட்டு ஊதி ஸ்ராட் ஆகி பின்னர் மண்ணெண்ணெயில் ஓடியது। இரவில் மண்ணைண்ணை லாம்புதான்। படிப்பதற்கு மேசை லாம்பு। சாதாரண தேவைகளுக்கு ஜாம்போத்தல் விளக்கு என்று ஒன்றிருந்தது। அது தமிழீழ பொருண்மிய மேம்பாட்டு நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட சிக்கன விளக்கு என நினைக்கிறேன்। ஜாம்போத்தல் ஒன்றிற்குள் சிறிதளவு பஞ்சையிட்டு அதனுள் ஊறக்கூடியதாக சிறிதளவு மண்ணைண்ணையும் விட்டு சைக்கிள் ரியூப்பிலுள்ள வால்வை கழற்றி அதில் பேப்பரில் உருட்டிய திரியை பஞ்சில் தொடுமாறு நிறுத்தி எரியச்செய்வது தான் ஜாம்போத்தல் விளக்கு। அந்தக்காலங்களில் மாலை ஆறுமணிக்கு முன் விளக்கு சிமினிகள் துடைப்பதும் வீட்டில் ஒரு வேலையாக இருந்தது।

நான்கு வரிகள் தேவாரம் பாடமாக்கி விட்டு பின்னர் லாம்புச்சிமினியில் பேனை மூடியை உருக்கிக்கொண்டிருந்து வீட்டில் ஏச்சு வாங்குவதும் சாதாரணம்। 'தேவாரம் கத்திப்பாடமாக்குறான் எனக்கு பிறிம்பா ஒரு விளக்கு வேணும்' என்றமாதிரியான முறைப்பாடுகளும் வேறு। ஆனாலும் தேவாரம் பாடமாக்கிறது ஒரு த்ரில்தான்। பல முயற்சிகளின் பின்னர் தடங்கலில்லாமல் முழுத்தேவாரம் ஒன்றை சொல்லுவது மிகவும் உற்சாகமான விடயம்।

தேவாரம் பாடமாக்குவதில் செல்வாக்கு செலுத்திய இன்னுமொரு விடயமும் இருந்தது। இந்தக்காலகட்டத்தில் யாழ்ப்பாணத்தில் பல ஆலயங்களும் சமயஅறிவுப்போட்டிகள் நடத்தி பெறுமதியான பரிசில்கள் வழங்கினார்கள்। தங்கப்பதக்கங்களும் அடக்கம்। எனது பாடசாலையில்வேறு, கோவில்களில் அளிக்கப்படும் பதக்கங்களை பாடசாலையிலும் மீண்டும் சூட்டிக்கெளரவித்தார்கள்। இதையெல்லாம்விட இவ்வாறு போட்டிகளில் வெற்றிபெறுவோர் பெண்பிள்ளைகள் மத்தியிலும் கவனிப்பைப்பெற்றதால் தேவாரம் பாடமாக்க வேண்டிய நிர்ப்பந்தம் எனக்கு। அந்த வயதில் குரலும் கொஞ்சம் மாறத்தொடங்கியதால் ஒரு விதமான டபிள் குரலில் தேவாரம் பாடமாக்கி வீட்டாரை மட்டுமல்லாது பக்கத்து வீட்டினரையும் இம்சைப்படுத்தினேன்.

இதைத்தவிரவும் யாழ்ப்பாணம் சைவபரிபாலன சபையினரும் ஆண்டுதோறும் சைவசமய அறிவுப்பரீட்சை வைத்து சான்றிதழ்கள்வழங்கினார்கள்। அதிவிசேடம், விசேடம், திறமை, சாதாரணம் போன்ற தரங்கள் சான்றிதழ்களில் குறிக்கப்படும்। இப்பரீட்சையில் திறமைச்சித்தி எடுத்தாலே பாடசாலையில் ஏதோ பிராணியைப்பார்த்ததுமாதிரி பார்ப்பார்கள் இதனால் அதிவிசேடம் நோக்கியதாகவே தேவாரப்பாடமாக்கல்கள் இருந்தன।

கோவில்களில் பெரும்பாலும் வயதுபோனவர்கள் தான் தேவாரம் பாடுவார்கள். ஏதாவது உற்சவ காலங்களில் தான் இளையவர்கள் குறிப்பாக பெண்பிள்ளைகள் அழகாக இராகத்துடன் பாடுவார்கள். வயதானவர்கள் பாடும் தேவாரங்கள் அநேகமாக ஒரேதேவாரமாகவும் ஒரே இராகத்திலும் அமைந்திருக்கும். இங்கு நான் இராகமெனச்சொல்வது பாடுபவர்களின் தனிப்பட்ட இராகங்கள். அதற்கும் சங்கீதத்திற்கும் ஒருவேளை சம்பந்தமேயில்லாதிருக்கும். அவர்கள் பாடும் இராகத்தில் பெரும்பாலும் அவர்களின் தனிப்பட்ட இன்ப துன்பங்களும் கலந்திருக்கலாம். தேவாரம் பாடுவதற்கு சண்டை பிடிக்கும் கோவில்களும் உண்டு.

எனக்குத்தெரிந்து ஒரு சண்டை பிள்ளையார் கதை படிக்கும்போது இடம்பெற்றது। பிள்ளையார்கதை படிப்பதில் பெரும்போட்டி। காரணம் அது மைக்கில் (MIC) படிப்பதால் என நினைக்கிறேன். பிள்ளையார்கதை தொடங்கும்போது சின்ன சிட்டி ஒன்றில் கற்பூரம் கொளுத்துவார்கள். கதை படித்து முடியும் வரை தொடர்ச்சியாக கற்பூரம் எரிந்து கொண்டிருக்கும் வகையில் கற்பூரம் போட்டுக்கொண்டே இருக்கவேண்டும். இதில் சவாலான விடயம் என்ன என்றால் பொருளாதாரத்தடையில் தடைவிதிக்கப்பட்ட பொருட்களில் பிரதானமானது கற்பூரம். எனவே வெகு சிக்கனமாகப்பாவிக்கவேண்டும். ஒரு கட்டி கற்பூரம் எரிந்து முடிந்து அடியில் அந்த வெள்ளை நிறம் மறைந்து போவதற்கு இடையில் அடுத்த கட்டியைப்போடவேண்டும். இந்தப்பெரும்பணி எனக்குத்தரப்பட்டிருந்தது. எனவே பிள்ளையார் கதையின்போது 'இலக்கண சுந்தரி....' ஆட்களைவிட எனது கவனம் எல்லாம் கற்பூர ஜோதியிலேயே இருக்கும்.

அன்று அவ்வாறே படித்துக்கொண்டிருந்தபோது இரண்டு வயதானவர்களிற்கிடையில் சண்டை. முன்பே பொருந்திக்கொண்டதற்கு மாறாக சிலவரிகள் கூடப்படித்துவிட்டுத்தான் அடுத்த சந்தர்ப்பம் அளித்தாராம் என்று தொடங்கி காணிப்பிரச்சனை எல்லைப்பிரச்சனை எல்லாம் வந்து கடைசியில் ஐயர் நூல் சுற்றி வைத்திருந்த செம்புகளால் கைகலக்கும் நிலைமைக்குப்போனபோதும் பிள்ளையார் அமைதியாக இருந்தார்। ஆனால் நான் கொஞ்சம் ரென்சனாக இருந்தேன்। எனெனில் சண்டையால் ஒதுக்கபட்ட நேரத்தை விட நேரம் நீடிப்பதால் கற்பூர கையிருப்பு வெகுவாகக் குறைந்து வந்தது। திருவெம்பாவை நேரங்களிலும் இவ்வாறான சண்டைகள் வருவதுண்டு.

அநேகமாக தமிழ்மொழிக்குத்தான் இந்தநிலை என்று நினைக்கிறேன்। அதாவது தமிழுக்கே ஒரு உரைபெயர்ப்பு வேண்டிய நிலை। திருக்குறளில் இருந்து தேவாரங்கள் சங்ககாலப்பாடல்கள் ஈறாக படித்தவுடனேயே விளங்கிக்கொள்பவர்கள் அல்லது விளக்கம்சொல்லக்கூடியவர்கள் மிகச்சிலரே। மொழியின் தொன்மையால் ஏற்பட்ட இடைவெளியால் இது ஏற்பட்டது। எனவே தேவாரங்கள் பாடமாக்கியது போக அதற்கு பொருள்சொல்வது அதனைவிட சவாலானது।

ஒரு இராணுவம் போரிட்டபடியே பின்வாங்குவதைப்போல நாமும் பண்பாடு கலாசாரம் என்று சொல்லிச் சொல்லியே அதிலிருந்து விலகிக்கொண்டு வருகிறோம்। அல்லது வரவைக்கப்படுகிறோம்। தற்போது நான் வேட்டி கட்டியே பலவருடங்கள் ஆகிவிட்டன। பழைய பாடமாக்கிய தேவாரங்கள் சிலதை ஞாபகப்படுத்திப்பார்க்கிறேன்। ஒன்றிரண்டு வரிகளின் பின்னர் தடுமாறுகிறது। குனித்த புருவமும்.... ஆலந்தானுகந்தமுது செய்தானை..., நிலைபெறுமாறெண்ணுதியே... என்று சில ஞாபகம் இருந்தாலும் முழுமையாக நினைவில் இல்லை। என்னபுண்ணியம் செய்தனை நெஞ்சமே.... எனும் தேவாரத்தை தர்ஷன் அண்ணா பாடசாலையில் அருமையாகப்பாடுவார்।

பதிவில் ஒரு தேவாரத்தையாவது முழுமையாகக் கொடுக்கவேண்டும் என்று முயற்சி செய்ததில் இத்தேவாரம் முழுமையாக வந்தது। அதிலும் 'மழபாடி' என்பதில் 'வனபாடி.... வானம்பாடி...' என்ற குழப்பங்கள் வந்ததில் வீட்டில் தொலைபேசி உறுதிப்படுத்திக்கொண்டேன்।

திருச்சிற்றம்பலம்
பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து
மின்னார் செஞ்சடைமேல் மிளிர்கொன்றை யணிந்தவனே
மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே
அன்னே உன்னை யல்லால் இனியாரை நினைக்கேனே.
திருச்சிற்றம்பலம்

Saturday, May 10, 2008

சுவர்ண சுந்தரி

1958 இல் வெளிவந்த தெலுங்குத் திரைப்படம் சுவர்ணசுந்தரி. இத்திரைப்படத்தில் இடம்பெற்ற 'குஹீ குஹீ போலே கொயலியா..' எனத்தொடங்கும் பாடல் அனைத்து இசைப்பிரியர்களையும் கொள்ளை கொண்டது மட்டுமல்லாமல் இன்றைய தலைமுறையினரிடம் கூட பிரபல்யம் பெற்று விளங்குகிறது. இப்பாடலை பெரும்பாலான திரைஇசைப்போட்டிகளில் போட்டியாளர்கள் சவாலாக ஏற்று நம்பிக்கையுடன் பாடுவதை அவதானிக்க முடிகிறது. இப்பாடல் தொடர்பாக எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் சொல்லும்போது இப்பாடல்களைப் பாடாத போட்டிகளும் குறைவு, இதைப்பாடியும் வெற்றிபெறாதவர்களும் குறைவு எனக்குறிப்பிடுகின்றார். இந்தளவிற்கு இப்பாடலின் இசை கவர்ச்சியாகவும் நுணுக்கம் மிகுந்ததாகவும் காணப்படுகிறது. மேடை நிகழ்வு ஒன்றில் லதாமங்கேஷ்கார் அவர்கள் பாடிய இந்தப் பாடலை இங்கே கேட்கலாம்

kuhu kuhu bole koyaliya - Latha Mankeshkar

ஆதிநாராயணராவ் என்ற இசையமைப்பாளரால் இசையமைக்கப்பட்ட இப்பாடல் ஹம்சானந்தி இராகத்துடன் தொடங்கி இராகமாலிகையின்பின்னர் கல்யாணி இராகத்துடன் முடிகிறது. இடையிடையில் வரும் சவாலான அசைவுகள் சிலாகிப்பானவை. இறுக்கமான லய அமைப்பும் கூட. 1958 இல் லதாமங்கேஷ்கார் மற்றும் எம்.லத்திஃப் இருவராலும் பாடப்பெற்றது.

Kuhu Kuhu Bole Koheliya - Latha Mankeshkar , M.Latif

பின்னர் இது தமிழில் 'மணாளனே மங்கையின் பாக்கியம்' என்றபெயரில் எடுக்கப்பட்டபோது இதே பாடல் 'தேசுலாவுதே தேன்மலராலே..' என்று தொடங்கும் பாடலாக மொழிமாற்றம் செய்யப்பட்டு பி.சுசீலா மற்றும் கண்டசாலா ஆகியோரால் பாடப்பட்டது. தென்னிந்திய தனியார் தொலைக்காட்சி ஒன்றின் போட்டி நிகழ்ச்சியொன்றில் ராகினிசிறீ தமிழ்வடிவத்தை சிறப்பாகப்பாடுகிறார்.




தற்போது பிரபலமான பாடகியாக விளங்கும் ஷ்ரேயா கோஷலும் சிறுவயதில் இப்பாடலை ஒரு Children's Mega Final போட்டி நிகழ்ச்சியொன்றில் கிளிப்பிள்ளை போல் ஒப்பிக்காமல் தனது கற்பனையையும் சேர்த்து பிரமாதமாகப்பாடுகிறார்.

shreya-kuhukuhu.mp3 - Shreya Goshal

மலையாள தொலைக்காட்சி நிகழ்வொன்றின் போட்டியின்போது போட்டியாளர் ரூபா கடும் பயிற்சியுடன் சிறப்பாகப்பாடி நடுவர்களையே அசத்துகிறார்.



இவ்வாறு எக்காலத்திலும் சிலாகிக்கும் ஒரு பாடலைத்தந்து காலத்தால் அழியாதவராக இசையமைப்பாளர் ஆதிநாராயண ராவ் நிலைத்து நிற்கிறார்.

றேடியோஸ்பதியில் பின்னூட்டம் ஒன்றின் மூலம் இப்பாடலின் தமிழ் வடிவம் தொடர்பாக தகவல் தெரிவித்த திருமதி.துளசிகோபால் அவர்களுக்கு நன்றி.

இதோ அந்த பாடல் வரிகள்..

ஆ....ஆ...ஆ...ஆ...ஆ
?தேசுலாவுதே தேன் மலராலே
தேசுலாவுதே தேன் மலராலே
தென்றலே காதல் கவி பாடவா...
விளையாட வா...
தேசுலாவுதே தேன் மலராலே

மாசிலா இதயமேவிட வாராஇ.. ஆ..ஆ..ஆ..
மாசிலா இதயமேவிட வாராஇ.. ஆ..ஆ..ஆ..
மாசிலா இதயமேவிட வாராஇ
மது நிலை தவழ்ந்திடும் புது நிலை பாராய்.
மது நிலை தவழ்ந்திடும் புது நிலையால்
மன ஊஞ்சல் ஆடுவோம் உல்லாசமாய் சல்லாபமாய் ஆ..ஆ..ஆ..
தேசுலாவுதே தேன் மலராலே

பாராய்....
பாராய் மறைந்து வரும் மின்னலயே
பாராய் மறைந்து வரும் மின்னலயே..
மின்னுவதேனோ..
மேக ராஜான் சுகமேவிட தானோ'
உண்மை இதானோ
உயிர்கள் வாழ மழை பெய்திட தானோ
உரிமையோடு மன வானில் நாமே
உரிமையோடு மன வானில் நாமே
ஊஞ்சல் ஆடுவோம் உல்லாசமாய் சல்லாபமாய் ஆ..ஆ..ஆ..ஆ
தேசுலாவுதே தேன் மலராலே

ஓ..ஓ...ஓ......
ஓடி வா வெண்ணிலாவே
இங்கு ஓடி வா வெண்ணிலாவே
வருவாய் நிலாவே
வாழ்வினிலே ஒரு நாள் இதுவே நிலவே
ஓடி வா வெண்ணிலாவே
கண்ணால் பேசும் காவியமே
கண்ணால் பேசும் காவியமே
காவியமே புகழ் காதல் இன்பமே
காவியமே புகழ் காதல் இன்பமன
ஊஞ்சல் ஆடுவோம் உல்லாசமாய் சல்லாபமாய் .. ஆ. ஆ ..ஆ ..ஆ
தேசுலாவுதே தேன் மலராலே...

ஆ...ஆ..ஆ..ஆ..
மனதை போல் மலருமே குமுதமே
மதுவினில் சுகம் தருமே..ஏ..ஏ...
மனதை போல் மலருமே குமுதமே
மதுவினில் சுகம் தருமே..ஏ..ஏ...
மனதை போல் மலருமே
இதயமே உன்னிடமே
இதயமே உன்னிடமே
இன்பம் பாயும் உன்னாலே என் வாழ்விலே
பாயும் உன்னாலே என் வாழ்விலே