Tuesday, July 22, 2008

தென்கிழக்காசிய வேங்கை - தென்கொரியா - 02

தென்கொரியா பெளத்தமதம் சார்ந்த நாடாக இருந்தபோதும் 46 வீதத்திற்கும் கூடுதலானவர்கள் எந்தமதத்தையும் சாராதவர்களாகவே இருக்கிறார்கள். விண்ணப்பப்படிவங்களில் கூட 'எந்த மதத்தையும் சாராதவர்..' என்ற தெரிவும் தரப்பட்டிருக்கும்.



30 வீதமானவர்கள் பெளத்தர்களாகவும் 15 வீதமானவர்கள் கிறிஸ்தவர்களாகவும் இருக்கிறார்கள். 50000 பேர்வரை முஸ்லிம்களாகவும் இருக்கிறார்கள்.
(படம் - கொரிய மயானம்)
மதநிகழ்வுகளில் மக்கள் பங்களிப்பு குறைவாக இருக்கும். வெசாக்குடன் வரும் ஊர்வலத்தில் இலங்கை பெரஹராவை ஒத்தஊர்வலங்கள் நடைபெறும்.

அரசியல் குறித்தும் பெரும்பாலானவர்கள் அலட்டிக்கொள்வதில்லை. அதற்கு அவர்களுக்கு நேரமும் இருப்பதில்லை. தற்போதய ஜனாதிபதி திரு.லீ மியுன் பக் அவர்கள் வேட்பாளராக இருந்தபோது கொரியாவின் ஹீண்டாய் நிறுவன ஊழல் வழக்கொன்றில் சம்பந்தப்பட்டிருந்தார். ஆனால் அதையும் மீறி மக்களால் அவர் தெரிவுசெய்யப்பட்டார். அதன்பின்னர் நீதிமன்றம் அந்த வழக்குகளில் இருந்து அவரை விடுவித்தது.



தேர்தல் பிரச்சாரங்கள் அமைதியாகவும் நாசூக்கான முறையிலும் செய்யப்படும்.
(படம்- வீதியோரத்தில் தேர்தல் பிரசாரம்)
பொதுவாக மேடையுடன் கூடிய வாகனம் ஒன்றில் வேட்பாளர் மக்கள்கூடும் சந்திகளில் உரையாற்றும்போது சீருடையணிந்த பெண்கள் அவருக்கு ஆதரவாக கோஷமிடுவார்கள். சுவரொட்டிகள் மற்றும் பதாதைகள் நகரசபையால் ஒதுக்கப்பட்ட இடங்களில் மட்டுமே காட்சிப்படுத்தப்படும்.



கொரியர்களின் பாரம்பரிய உடை யப்பானியர்களின் கிமோனோ உடையை சிறிதளவு ஒத்தது. ஆயினும் இவ்வாறு பாரம்பரிய உடைகளை அணிபவர்களின் எண்ணிக்கை மிகக்குறைவு என்று சொல்லலாம். இளைய தலைமுறையினர் பெரும்பாலும் அமெரிக்கபாணியிலான நாகரிகங்களிலேயே ஆர்வம் காட்டுகிறார்கள்.
(படம் - கொரிய பாரம்பரிய உடை)




கொரியாவில் சாதாரணமாக விருந்துகளும் கதிரையில் இருக்காமல் நிலத்தில் தலையணை போன்ற திண்டின்மீது உட்கார்ந்தே விருந்து உண்பார்கள். விருந்தில் மதுவும் மாமிசமும் பிரதானமானது.
(படம் - கொரிய விருந்து)




போர் ஒரு முடிவுக்கு வந்தாலும் எல்லையில்காணப்படும் பதற்றத்தை காரணம்காட்டி அமெரிக்கத்துருப்பினர் 24000 வரையானவர்கள் தற்போதும் கொரியாவில் தங்கியிருந்து கொரியஇராணுவத்துக்கு உதவிவருகின்றனர். இதனால் கொரியா பல சங்கடங்களுக்கும் நிபந்தனைக்கும் ஆளாகிவருகிறது.

அமெரிக்க இராணுவத்தினருக்கென நெற்காணிகள் சுவீகரிக்கப்பட்டன. உள்ளுர் சந்தைவிலைகளைவிடவும் குறைவான விலையில் மாட்டிறைச்சியும் அரிசியும் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றது.



அரசின் இவ்வாறான நடவடிக்கைகளுக்கு எதிராக மக்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.
(படம் - 18ம் நூற்றாண்டு அரச அரண்மனை)
அண்மையில் அரசால் சுவீகரிக்கப்பட்ட தனது காணிக்கு நட்டஈடு கிடைக்காததால் வெகுண்ட வயோதிபர் ஒருவர் புராதன மேற்குவாயில் என்று அழைக்கப்டும் வரலாற்று மரக்கட்டடம் ஒன்றிற்கு தீவைத்து அக்கட்டடம் முழுமையாக எரிந்து நாசமானது.



கோடை, மழை, குளிர், வசந்தம் என்ற நான்கு காலநிலைகள் காணப்படுகின்றன. குளிர்காலமே இதில் அதிகம். கடும்குளிர் காரணமாக பொலிதீன் கூடாரங்களுக்குள்ளேயே பயிர்ச்செய்கை நடைபெறுகிறது. கோடைகாலத்தில் நெல்விதைப்பு இடம்பெறும். ஒப்பீட்டளவில் விவசாயிகள் வருமானம் குறைந்தவர்களாகவே இருக்கிறார்கள்.




தலைநகரம் சோலில் (Seoul) பார்க்கவேண்டிய இடங்களாக பல நிறுவப்பட்டுள்ளன. கடல் மட்டத்திலிருந்து 365மீற்றர் உயரமான சோல் ரவரிலிருந்து சோலை நாலாபக்கமும் தொலைநோக்கிமூலமும் கண்டுகளிக்கலாம். மலைஒன்றில் அமைக்கப்பட்டுள்ள இந்த கோபுரத்தின் அடிப்பகுதிக்கு கேபிள் கார் மூலம் செல்லலாம்.



இந்த கோபுரத்தின் அடிவாரத்தில் காதலர்களின் பெயர்கள் எழுதிய பூட்டுக்களை பூட்டி விட்டால் காதலர்கள் பிரியாமல் இணைந்திருப்பார்கள் என்று நம்புகிறார்கள்.

டிஸ்னிலாண்ட் ஐ ஒத்த Lotteworld. Seoul land, Dream land, Everland என்று பல கேளிக்கை பூங்காக்கள் உள்ளன.


Coex Aquarium மற்றும் 63city என்பவற்றில் கடல்வாழ் உயிரினங்களை நேரடியாக இராட்சதநீர்த்தொட்டி குகைகளில் காணமுடியும். தலைநநகரின் மத்தியில்ஓடும் ஆறான Han river என்பதில் 'ஜொய்னாறு' எனுமிடத்தில் கேளிக்கை படகுசவாரி செய்வதனூடாக இரவில் சோலின் அழகை இரசிக்க முடிவது இனிமையான அனுபவம்.



கோடைகாலத்தில் புகழ்பெற்ற கடற்கரையாக 'ஹியுந்தே' கடற்கரை விளங்குகிறது. இது பூசான் எனுமிடத்தில் தலைநகரிலிருந்து ஆறுமணிநேர பயணதொலைவில் உள்ளது. இவற்றை தவிர கொரிய கலைகலாசாரத்தை விளக்கும் நூதனசாலைகளும் தாவர மற்றும் மிருக காட்சிசாலைகளும் உல்லாசப்பயணிகளை கவருமிடங்களாக உள்ளன.

Yongsan, Technomart என்பவை பெரிய இலத்திரனியல் வர்த்தக நிலையங்களாகவும் Dongdamun, Namdamun என்பவை பிரத்தியேகமாக வெளிநாட்டினரை கவரும் பிரபல சந்தைகளாகவும் விளங்குகின்றன.


சோல் நகரசபையினர் பிரகடனப்படுத்திய 'Hi Seoul..! - Soul of Asia' என்ற மகுடவாக்கியம் இங்கு குறிப்பிடத்தக்கது.

4 comments:

கானா பிரபா said...

ஆஹா சந்தடியில்லாம இரண்டாவது பதிவும் வந்திட்டுத்தா, நன்றி நன்றி, ஆறுதலா மீண்டும் படிக்கிறேன்

ஆ.கோகுலன் said...

வணக்கம் கானாபிரபா..

தொடரும் என்று போட்டாலே அடுத்ததை தட்டச்சோணுமே என்ற ஒரு ஆயாசம் இருக்கும்..

ஆனால் நீங்கள் பலதொடர்களை ஒருங்கே சமாளிக்கிறீர்கள்.. :)

Anonymous said...

நல்லா எழுதறீங்க...

வெரிகுட். கண்டினியூ !!!!!

ஆ.கோகுலன் said...

பாராட்டுக்கு மிகவும் நன்றி செந்தமிழ் ரவி.

கோவை விஜய் உங்கள் அறைகூவலுக்கும் நன்றி.