Saturday, May 17, 2008

தேவாரமும் நானும்

சிறுவயதில் தேவாரம் பாடமாக்குதல் என்பது மிகப்பெரிய சவால்। கோவில்களில் தேவாரம் பாடினால் தான் கடவுள் வரம் தருவார் என்றும் சொல்லப்பட்டது। 'சொற்றுணை வேதியன்॥' பாடும்போது கல்லைக்கட்டி கடலில் போட்டபோது அவர் பாடியதை சும்மா நின்று கும்பிட்டுக்கொண்டிருக்கும் நான் ஏன் பாடவேண்டும் என நினைத்த காலங்களும் உண்டு। (கல்லைக்கட்டி கடலில் போட்டாலும் எமக்கு இன்னும் அதையொத்த துன்பங்கள் இருக்கின்றன என்று வாதிடுவது வேறு)।

அந்தக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் கடுமையான பொருளாதாரத்தடை இருந்தது। மின்சாரம் இல்லை। உடுப்புத்தோய்ப்பது பனங்களியில்। மோட்டார் சைக்கிள்கள் பெற்றோல் சிறுதுளிவிட்டு ஊதி ஸ்ராட் ஆகி பின்னர் மண்ணெண்ணெயில் ஓடியது। இரவில் மண்ணைண்ணை லாம்புதான்। படிப்பதற்கு மேசை லாம்பு। சாதாரண தேவைகளுக்கு ஜாம்போத்தல் விளக்கு என்று ஒன்றிருந்தது। அது தமிழீழ பொருண்மிய மேம்பாட்டு நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட சிக்கன விளக்கு என நினைக்கிறேன்। ஜாம்போத்தல் ஒன்றிற்குள் சிறிதளவு பஞ்சையிட்டு அதனுள் ஊறக்கூடியதாக சிறிதளவு மண்ணைண்ணையும் விட்டு சைக்கிள் ரியூப்பிலுள்ள வால்வை கழற்றி அதில் பேப்பரில் உருட்டிய திரியை பஞ்சில் தொடுமாறு நிறுத்தி எரியச்செய்வது தான் ஜாம்போத்தல் விளக்கு। அந்தக்காலங்களில் மாலை ஆறுமணிக்கு முன் விளக்கு சிமினிகள் துடைப்பதும் வீட்டில் ஒரு வேலையாக இருந்தது।

நான்கு வரிகள் தேவாரம் பாடமாக்கி விட்டு பின்னர் லாம்புச்சிமினியில் பேனை மூடியை உருக்கிக்கொண்டிருந்து வீட்டில் ஏச்சு வாங்குவதும் சாதாரணம்। 'தேவாரம் கத்திப்பாடமாக்குறான் எனக்கு பிறிம்பா ஒரு விளக்கு வேணும்' என்றமாதிரியான முறைப்பாடுகளும் வேறு। ஆனாலும் தேவாரம் பாடமாக்கிறது ஒரு த்ரில்தான்। பல முயற்சிகளின் பின்னர் தடங்கலில்லாமல் முழுத்தேவாரம் ஒன்றை சொல்லுவது மிகவும் உற்சாகமான விடயம்।

தேவாரம் பாடமாக்குவதில் செல்வாக்கு செலுத்திய இன்னுமொரு விடயமும் இருந்தது। இந்தக்காலகட்டத்தில் யாழ்ப்பாணத்தில் பல ஆலயங்களும் சமயஅறிவுப்போட்டிகள் நடத்தி பெறுமதியான பரிசில்கள் வழங்கினார்கள்। தங்கப்பதக்கங்களும் அடக்கம்। எனது பாடசாலையில்வேறு, கோவில்களில் அளிக்கப்படும் பதக்கங்களை பாடசாலையிலும் மீண்டும் சூட்டிக்கெளரவித்தார்கள்। இதையெல்லாம்விட இவ்வாறு போட்டிகளில் வெற்றிபெறுவோர் பெண்பிள்ளைகள் மத்தியிலும் கவனிப்பைப்பெற்றதால் தேவாரம் பாடமாக்க வேண்டிய நிர்ப்பந்தம் எனக்கு। அந்த வயதில் குரலும் கொஞ்சம் மாறத்தொடங்கியதால் ஒரு விதமான டபிள் குரலில் தேவாரம் பாடமாக்கி வீட்டாரை மட்டுமல்லாது பக்கத்து வீட்டினரையும் இம்சைப்படுத்தினேன்.

இதைத்தவிரவும் யாழ்ப்பாணம் சைவபரிபாலன சபையினரும் ஆண்டுதோறும் சைவசமய அறிவுப்பரீட்சை வைத்து சான்றிதழ்கள்வழங்கினார்கள்। அதிவிசேடம், விசேடம், திறமை, சாதாரணம் போன்ற தரங்கள் சான்றிதழ்களில் குறிக்கப்படும்। இப்பரீட்சையில் திறமைச்சித்தி எடுத்தாலே பாடசாலையில் ஏதோ பிராணியைப்பார்த்ததுமாதிரி பார்ப்பார்கள் இதனால் அதிவிசேடம் நோக்கியதாகவே தேவாரப்பாடமாக்கல்கள் இருந்தன।

கோவில்களில் பெரும்பாலும் வயதுபோனவர்கள் தான் தேவாரம் பாடுவார்கள். ஏதாவது உற்சவ காலங்களில் தான் இளையவர்கள் குறிப்பாக பெண்பிள்ளைகள் அழகாக இராகத்துடன் பாடுவார்கள். வயதானவர்கள் பாடும் தேவாரங்கள் அநேகமாக ஒரேதேவாரமாகவும் ஒரே இராகத்திலும் அமைந்திருக்கும். இங்கு நான் இராகமெனச்சொல்வது பாடுபவர்களின் தனிப்பட்ட இராகங்கள். அதற்கும் சங்கீதத்திற்கும் ஒருவேளை சம்பந்தமேயில்லாதிருக்கும். அவர்கள் பாடும் இராகத்தில் பெரும்பாலும் அவர்களின் தனிப்பட்ட இன்ப துன்பங்களும் கலந்திருக்கலாம். தேவாரம் பாடுவதற்கு சண்டை பிடிக்கும் கோவில்களும் உண்டு.

எனக்குத்தெரிந்து ஒரு சண்டை பிள்ளையார் கதை படிக்கும்போது இடம்பெற்றது। பிள்ளையார்கதை படிப்பதில் பெரும்போட்டி। காரணம் அது மைக்கில் (MIC) படிப்பதால் என நினைக்கிறேன். பிள்ளையார்கதை தொடங்கும்போது சின்ன சிட்டி ஒன்றில் கற்பூரம் கொளுத்துவார்கள். கதை படித்து முடியும் வரை தொடர்ச்சியாக கற்பூரம் எரிந்து கொண்டிருக்கும் வகையில் கற்பூரம் போட்டுக்கொண்டே இருக்கவேண்டும். இதில் சவாலான விடயம் என்ன என்றால் பொருளாதாரத்தடையில் தடைவிதிக்கப்பட்ட பொருட்களில் பிரதானமானது கற்பூரம். எனவே வெகு சிக்கனமாகப்பாவிக்கவேண்டும். ஒரு கட்டி கற்பூரம் எரிந்து முடிந்து அடியில் அந்த வெள்ளை நிறம் மறைந்து போவதற்கு இடையில் அடுத்த கட்டியைப்போடவேண்டும். இந்தப்பெரும்பணி எனக்குத்தரப்பட்டிருந்தது. எனவே பிள்ளையார் கதையின்போது 'இலக்கண சுந்தரி....' ஆட்களைவிட எனது கவனம் எல்லாம் கற்பூர ஜோதியிலேயே இருக்கும்.

அன்று அவ்வாறே படித்துக்கொண்டிருந்தபோது இரண்டு வயதானவர்களிற்கிடையில் சண்டை. முன்பே பொருந்திக்கொண்டதற்கு மாறாக சிலவரிகள் கூடப்படித்துவிட்டுத்தான் அடுத்த சந்தர்ப்பம் அளித்தாராம் என்று தொடங்கி காணிப்பிரச்சனை எல்லைப்பிரச்சனை எல்லாம் வந்து கடைசியில் ஐயர் நூல் சுற்றி வைத்திருந்த செம்புகளால் கைகலக்கும் நிலைமைக்குப்போனபோதும் பிள்ளையார் அமைதியாக இருந்தார்। ஆனால் நான் கொஞ்சம் ரென்சனாக இருந்தேன்। எனெனில் சண்டையால் ஒதுக்கபட்ட நேரத்தை விட நேரம் நீடிப்பதால் கற்பூர கையிருப்பு வெகுவாகக் குறைந்து வந்தது। திருவெம்பாவை நேரங்களிலும் இவ்வாறான சண்டைகள் வருவதுண்டு.

அநேகமாக தமிழ்மொழிக்குத்தான் இந்தநிலை என்று நினைக்கிறேன்। அதாவது தமிழுக்கே ஒரு உரைபெயர்ப்பு வேண்டிய நிலை। திருக்குறளில் இருந்து தேவாரங்கள் சங்ககாலப்பாடல்கள் ஈறாக படித்தவுடனேயே விளங்கிக்கொள்பவர்கள் அல்லது விளக்கம்சொல்லக்கூடியவர்கள் மிகச்சிலரே। மொழியின் தொன்மையால் ஏற்பட்ட இடைவெளியால் இது ஏற்பட்டது। எனவே தேவாரங்கள் பாடமாக்கியது போக அதற்கு பொருள்சொல்வது அதனைவிட சவாலானது।

ஒரு இராணுவம் போரிட்டபடியே பின்வாங்குவதைப்போல நாமும் பண்பாடு கலாசாரம் என்று சொல்லிச் சொல்லியே அதிலிருந்து விலகிக்கொண்டு வருகிறோம்। அல்லது வரவைக்கப்படுகிறோம்। தற்போது நான் வேட்டி கட்டியே பலவருடங்கள் ஆகிவிட்டன। பழைய பாடமாக்கிய தேவாரங்கள் சிலதை ஞாபகப்படுத்திப்பார்க்கிறேன்। ஒன்றிரண்டு வரிகளின் பின்னர் தடுமாறுகிறது। குனித்த புருவமும்.... ஆலந்தானுகந்தமுது செய்தானை..., நிலைபெறுமாறெண்ணுதியே... என்று சில ஞாபகம் இருந்தாலும் முழுமையாக நினைவில் இல்லை। என்னபுண்ணியம் செய்தனை நெஞ்சமே.... எனும் தேவாரத்தை தர்ஷன் அண்ணா பாடசாலையில் அருமையாகப்பாடுவார்।

பதிவில் ஒரு தேவாரத்தையாவது முழுமையாகக் கொடுக்கவேண்டும் என்று முயற்சி செய்ததில் இத்தேவாரம் முழுமையாக வந்தது। அதிலும் 'மழபாடி' என்பதில் 'வனபாடி.... வானம்பாடி...' என்ற குழப்பங்கள் வந்ததில் வீட்டில் தொலைபேசி உறுதிப்படுத்திக்கொண்டேன்।

திருச்சிற்றம்பலம்
பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து
மின்னார் செஞ்சடைமேல் மிளிர்கொன்றை யணிந்தவனே
மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே
அன்னே உன்னை யல்லால் இனியாரை நினைக்கேனே.
திருச்சிற்றம்பலம்

32 comments:

ஆயில்யன் said...

//ஒரு இராணுவம் போரிட்டபடியே பின்வாங்குவதைப்போல நாமும் பண்பாடு கலாசாரம் என்று சொல்லிச் சொல்லியே அதிலிருந்து விலகிக்கொண்டு வருகிறோம்।//

உண்மைதான்!

நல்லா இருக்கு:)))

ஆயில்யன் said...

பதிவுக்கு சம்பந்தமில்லாதது:)

எடிட்டரில் பதிவினை ஜஸ்டிபை செய்வதால் நல்ல அழகான வடிவத்தினை தந்தாலும், அது பயர் பாக்ஸில் சரியாக தெரியாது என்று நினைக்கிறேன்! சரி பார்த்துக்கொள்ளவும்:))

nayanan said...

//பல முயற்சிகளின் பின்னர் தடங்கலில்லாமல் முழுத்தேவாரம் ஒன்றை சொல்லுவது மிகவும் உற்சாகமான விடயம்।

//

பாராட்டுக்கள்.
உணர்ந்து எழுதியிருக்கிறீர்கள்.

அன்புடன்
நாக.இளங்கோவன்

G.Ragavan said...

தேவார நினைவுகள் தேனாக இருந்தன. நல்லதொரு அருமையான தேவாரச் செய்யுளை நினைவு படுத்தியமைக்கு நன்றி.

கற்றூணைப் பூட்டிக் கடலிலே பாய்ச்சினும் நற்றுணையாவது நமசிவாயமே!


ஆயில்யன் சொன்னது போல பதிவு பயர்பாக்சில் வரவில்லை. ஜஸ்டிபை செய்ய வேண்டாம்.

ஆ.கோகுலன் said...

வாருங்கள் ஆயில்யன்,

நீங்கள் சொன்ன விடயத்தை சரிபார்க்கிறேன். வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

ஆ.கோகுலன் said...

வாருங்கள் நாக.இளங்கோவன்,
வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி.

கானா பிரபா said...

அட இந்தப் பதிவு எப்படி என் கண்ணிலிருந்து தப்பியது. நல்ல நினைவுப்பதிவு. தேவாரம் பாடமாக்கி பொழிப்புரை எழுதுவது எனக்கு கைவந்த கலை. ஆறாம் வகுப்பில் இருந்து ஓ எல் வரை என் வகுப்பில் சமயபாடத்தில் அதிக புள்ளிகள் எனக்கே எனக்காம்.

குண்டு விழும்போது நாம் பாடாத தேவாரங்களா?

ஆ.கோகுலன் said...

வணக்கம் ராகவன்,

//ஆயில்யன் சொன்னது போல பதிவு பயர்பாக்சில் வரவில்லை. ஜஸ்டிபை செய்ய வேண்டாம்.//

ஜஸ்டிபையை எடுத்து விட்டேன்.
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

ஆ.கோகுலன் said...

வணக்கம் கானாபிரபா

//குண்டு விழும்போது நாம் பாடாத தேவாரங்களா?//

ப்ச்.. என்ன செய்வது இப்பவும் குண்டு விழுந்து கொண்டுதானே இருக்கு. :-(

கருத்துக்கு நன்றி நன்றி.

Anonymous said...

nice article. r u kailash (kaileswaran)'s brother?

sasikaran
chunnakam

இறக்குவானை நிர்ஷன் said...

நல்லதொரு பதிவு!
கண்டபடி பாடமாக்கிய தேவாரங்களை யாராவது எங்கேயாவது ராகத்துடன் பாடும்போது கேட்க இனிமையாக இருக்கும். அப்போது நினைவுக்கு வரும்.. அடடடா இது அந்தத் தேவாரம் தானே? இவ்வளவு அழகா என்று! ம்ம்ம்...


பிரபாவின்
//
குண்டு விழும்போது நாம் பாடாத தேவாரங்களா?//

இந்த வரிகள் என்னை மேலும் மீட்டுப்பார்க்க வைத்தன

ஆ.கோகுலன் said...

வருக சசிகரன் மற்றும் நிர்ஷன்,

//r u kailash (kaileswaran)'s brother?//
இல்லை. நான் அவரில்லை! :-)

//கண்டபடி பாடமாக்கிய தேவாரங்களை யாராவது எங்கேயாவது ராகத்துடன் பாடும்போது கேட்க இனிமையாக இருக்கும். அப்போது நினைவுக்கு வரும்.. அடடடா இது அந்தத் தேவாரம் தானே? இவ்வளவு அழகா என்று! //

உண்மைதான்.. உண்மைதான்..


வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

jeevagv said...

மலரும் நினைவுகள் எங்களுக்கும் இனிமையாக இருந்தது, படித்தறிய, நன்றிகள்!
//மழபாடி' என்பதில் 'வனபாடி.... வானம்பாடி...' என்ற குழப்பங்கள் வந்ததில் வீட்டில் தொலைபேசி உறுதிப்படுத்திக்கொண்டேன்।//
இதுபோன்ற குழப்பங்கள் எனக்கும் வந்திருக்கின்றன.
//பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கணிந்து//
இது,
"பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து" என்று வரும், எனினும் பொருள் மாறவில்லை.

நாகு (Nagu) said...

அருமையான பதிவு. நிறைய ஞாபகங்களைக் கிளறிவிட்டீர்கள்.

கானா பிரபாவின் பதிவுகள் போல ஈழத்தமிழர்களின் வாழ்க்கையில் ஒரு பார்வை செலுத்த ஏதுவாக இருக்கிறது.

பாட்டின் முதலடி கடைசியில் அரைக்கசைத்து என்று வரும் என நினைக்கிறேன்.

ஆ.கோகுலன் said...

வருக ஜீவா மற்றும் நாகு,

தவறை சுட்டிக்காட்டியதற்கு நன்றி. தவறை திருத்திவிட்டேன். தங்கள் கருத்துக்கள் மகிழ்வை அளித்தது. மிக்க நன்றி.

சயந்தன் said...

பொங்கலுக்கு சந்தோசமா எழும்பி தேவாரம் பாடுற நேரம் சோகமாய் முடியும் எனக்கு - அந்த நேரம் எங்காவது ஓடி ஒளியும் என்னை காதை திருகி இழுத்து வந்து பாடடா என்றால் -

நல்லி நினைவுப் பகிர்வு

ஆ.கோகுலன் said...

வாங்கோ சயந்தன்..!.

//பொங்கலுக்கு சந்தோசமா எழும்பி தேவாரம் பாடுற நேரம் சோகமாய் முடியும் எனக்கு //

வீட்டில் என்றால் ஒருமாதிரி அட்ஜஸ்ட் பண்ணலாம். கோயிலில் என்றால் எது தேவாரம் எது திருவாசகம் என்பதெல்லாம்கூட மறந்துபோகும்.

வருகைக்கும் கருத்துக்கும் மிக்கநன்றி.

தமிழன்-கறுப்பி... said...

கோகுலன் தரம் பதிவு பழைய நினைவுகள் சுகம்தான் இல்லையோ....
தேவாரம் பாடமாக்கினாலும் அதை வடிவம் மாறாமல் எழுதவேணும் அப்பிடி எழுதாட்டால் அந்தந்த வரிகளுக்கு பக்கத்தில இரண்டு கோடு போட்டு மாக்ஸை குறைச்சுப்போடுவார் வாத்தி..அதாலயே பாடமாக்கின தேவாரத்தை வரிமாறாமல் எழுதிப்பழகுறதும் நடக்கும்...:)

தமிழன்-கறுப்பி... said...

பழைய பல நினைவுகளை மீட்டிருக்கிறது உங்கள் பதிவு,
நான் வேட்டி கட்டப்பழகினதே ஒரு பெரிய கதை:)))

ஆ.கோகுலன் said...

வருக தமிழன்!,

//தேவாரம் பாடமாக்கினாலும் அதை வடிவம் மாறாமல் எழுதவேணும்//

உண்மைதான்.
உங்கள் நினைவுகளையும் மீட்க வைத்தது எனக்கும் மகிழ்ச்சியே. மிக்க நன்றி தமிழன்.

வி. ஜெ. சந்திரன் said...

கோகுலன் உங்கள் தேவாரம் பற்றிய நினைவு பதிவு மீண்டும் எனக்கு தெரிந்த தேவாரங்களை நினை படுத்திபார்க்க தூண்டியது
சொற்றுணை வேதியன் மட்டும் தான் முழ்மையாக நினைவில் நிற்கிறது.
மற்றையவை அரையும் குறையுமாக தான் நினைவில் இருக்கிறது.


இன்று தான் உங்கள் பதிவு கண்ணில் பட்டது. தொடர்ந்து உங்கள் பதிவுகளை தாருங்கள்.

ஆ.கோகுலன் said...

வணக்கம் வி.ஜெ. சந்திரன்,

//சொற்றுணை வேதியன் மட்டும் தான் முழுமையாக நினைவில் நிற்கிறது.
மற்றையவை அரையும் குறையுமாக தான் நினைவில் இருக்கிறது.//

ஓ.. உங்களுக்கும் அதேநிலைமையா..? :)

தொடர்ந்து பதிவுகளை தர முயற்சிக்கிறேன். தங்கள் கருத்துக்கும் வரவுக்கும் மிக்க நன்றி.

Anonymous said...

தேவாரம் என்றாலே எனக்கு என் அப்பப்பாவின் நினைவு தான் வரும்..சின்ன வயதில் இருந்து சொல்லித்தந்தார்..

அருமையான பதிவு

ஆ.கோகுலன் said...

வாங்கோ தூயா..!

தேவாரம் பாடமாக்குவது என்பது ஒரு சின்ன வயது சாகசம். பலரிற்கும் அது ஒரு இனிய அனுபவம்.

வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி.

rahini said...

paaradukkal
nalla thokuppukal
inruthaan paaravi ideen
arumai
anpudan
rahini

ஆ.கோகுலன் said...

மிக்கநன்றி ராகினி கருத்துக்கும் வருகைக்கும்..

Anonymous said...

பழைய நினைவுகளை மீட்டுப் பார்க்கும் அருமையான பதிவு ! நான் சிறு வயதில் மன பாடம் செய்த முதல் தேவாரமும் சொற்றுணை வேதியனகத்தான் இருக்கும்! தேவாரங்களால், சமைய பாடங்களில் அதிக மதிபெண்கள் வாங்குவதும், ஆண்டுதோறும் சைவசமய அறிவுப்பரீட்சையின் போது அதிவிசேட சான்றிதழ்கள் வாங்கியதும், அதை மீண்டும் எடுத்து பார்க்க வேண்டும் போல் உள்ளது! கானாபிரபா அண்ணா போல், இன்று வரை எனக்கு நித்திரை வரவிட்டாலும் கூட முதலில் பாடுவது தேவாரம் தான்! :$

ஆ.கோகுலன் said...

வணக்கம் கஜந்தினி..!

//கானாபிரபா அண்ணா போல், இன்று வரை எனக்கு நித்திரை வரவிட்டாலும் கூட முதலில் பாடுவது தேவாரம் தான்! :$//

தாலாட்டு மெட்டில் தேவாரம் பாடமாக்கியிருக்கிறிங்களோ தெரியாது.. :)

தேவாரமே தாலாட்டாவது ஆச்சரியம்தான்..!

கருத்துக்கு மிக்க நன்றி.

Anonymous said...

ஒவ்வொன்றையுமு் உணர்ந்து எழுதியிருக்கீறீர்கள். எனக்கும் தேவாரம்,பொழிப்பு பாடமாக்குவதென்றால் சொக்லேட் சாப்பிடுறமாதிரி. சமயபாடத்திற்கு 90இற்கு குறையாமல் புள்ளிகள் கிடைக்கும். ஆனால் கோயில்களில் எல்லாம் பாடமாட்டேன். காரணம் பயம்.

ஆ.கோகுலன் said...

வாங்கோ அம்பிகை..!

புலம்பெயர்ந்து இருக்கும்போதுதான் தாயகத்தின் சின்னச்சின்ன விடயங்களும் தெளிவாக ஞாபகம் வரும். அது ஒருவிதமான அனுபவம்.
வேண்டுமென்றால் நீங்களும் புலம்பெயர்ந்து பாருங்களேன்.. :))

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

கிருஷ்ணபிள்ளை குருபரன் said...

சிவராத்திரிக்கு தேவாரங்களைத் தேடிப்போன போது சிக்கியது உங்கள் பதிவு. அருமை. உங்களைப் போலவே இரண்டும் கெட்டான் குரலில் பாடினாலும் தேவாரம் என் விருப்பத்தேர்வாகவே இருக்கும்.

தேவாரங்கள் பற்றிய ஒலிப் பதிவுகள் இந்த இணைப்பில் கண்டறிந்தேன்.
வேறு இணைப்புகள் இருப்பின் அறியத்தரவும்.
http://totalbhakti.com/musicList.php?lang_tag=Tamil

ஆ.கோகுலன் said...

வணக்கம் குருபரன்..!
நீங்கள் கி.குருபரன் என்றறிந்தது இன்னும் சந்தோஷம்.. 90 களின் பிற்பகுதியில் உங்கள் கவிதைகளை உதயனில் பார்த்திருக்கிறேன்..!
வாழ்த்துக்கள்..!!

கருத்துக்கும் வருகைக்கும் நன்றி..!

இந்த இணைப்பிலும் தேவாரங்கள் பற்றி அறிய முமுடியும்..

http://www.thevaaram.org/