Wednesday, April 23, 2008

கொலம்ப சன்னிய

கொலம்ப சன்னிய - மிகவும் நகைச்சுவையான ஒரு சிங்களத்திரைப்படம். எழுபதுகளில் வெளிவந்திருக்கலாம் என நினைக்கிறேன். மனிக் சந்திரசேகர என்பவர் இயக்கிய கறுப்பு வெள்ளைப் படம்.


இலங்கையிலுள்ள குக்கிராமம் ஒன்றில் இயற்கை கடன் கழிக்கவென செல்லும் அந்தரே என்பவரிற்கு மிகவும் பெறுமதியான இரத்தினக்கல் ஒன்று கிடைக்கின்றது. அதை விற்று திடீர் பணக்காரராகும் அந்தரேயும் அவரது குடும்பத்தினரும் கொழும்பில் செல்வந்தர்கள் வசிக்கும் பகுதியொன்றில் வீடு வாங்கி அங்கு பண்ணும் ரகளைகளே படத்தின் சாராம்சம்.

இந்திய சினிமாவின் சாயலில் தற்போது வெளிவந்து ரசிகர்களின் பொறுமையைச் சீண்டும் சிங்களத்திரைப்படங்களிற்கு இதுவொரு விதிவிலக்கு. அந்தக்காலத்திலேயே சிறந்த திரைக்கதை, எடிட்டிங், ஒளிப்பதிவு என எதிலும் சோடைபோகாத மிகவும் ரசிக்கும் படியான ஒரு நகைச்சுவை திரைப்படத்தை அளித்த இயக்குனர் மனிக் சந்திரசேகரவை அவசியம் பாராட்ட வேண்டும்.

இரத்தினக்கல் கூட்டுத்தாபனத்திடம் சுமார் ஒரு கோடி ரூபாவிற்கு அந்த இரத்தினத்தை விற்று அவர்கள் தந்த காசோலையை 'உந்த கடதாசி எனக்கு வேண்டாம்' என்று தொகையை பணமாகவே பெற்று பணத்தை தலையணை உறையொன்றுக்குள் வாங்கிக்கொண்ட அந்தரே, தனது மகன், மகள், வயதான சகோதரி (கிழவி) மற்றும் தனது நெருங்கிய உறவினர் யாக்கோலிஸ் சகிதம் வெள்ளைக்காரர்கள் வசிக்கும் பகுதியொன்றில் குடியேறுகிறார்.

அந்த ஆடம்பரவீட்டில் மலசலகூட கொமெட்டில் உடுப்பு தோய்க்க முயற்சிப்பதிலிருந்து ரகளை ஆரம்பமாகிறது. அதன் பின்னர் ஒரே சிரிப்புத்தான். ஷவரில் குளித்து அலுத்துப்போய் கிராமத்தில் கிணற்றில் குளிக்கும் அனுபவத்தைப்பெற கிணறு ஒன்றை தோண்டுகின்றனர். யாக்கோலிஸ் அதற்கு நாளும் இடமும் பார்த்துச்சொல்ல குறிப்பிட்ட சுபநாளில் கிணறு தோண்டப்படுகிறது. சில அடிகள் தோண்டியதுமே தண்ணீர் பீரிட்டுக்கொண்டுவர எல்லோரும் மகிழ்ச்சியில் ஆரவாரித்து யாக்கோலிஸை பாராட்டுகிறார்கள். பக்கத்து வீட்டில் ஷவரில் குளித்துக்கொண்டிருந்த வெள்ளைக்காரர் ஒருவர் திடீரென்று தண்ணீர் வராமல் போகவே வெளியில் வந்து பார்த்து தலையிலடித்துக் கொள்கிறார். இவர்கள் கிணறு வெட்டியது அவர்களின் பைப் லைனில்..!!

கொழும்பு நாகரிகம் மற்றும் ஆங்கிலம் என்பவற்றை மகளிற்கு போதிப்பதற்காக வாத்தியார் ஒருவரை ஒழுங்கு செய்கிறார் ஆச்சி. வாத்தியார் முதல் பாடமாக நேர் கோடு ஒன்று கீறி தலையில் புத்தகத்தை விழாமல் வைத்தவாறு ஆச்சிக்கும் மகளுக்கும் பூனை நடை (cat walk) பயிற்றுவிக்கிறார் ! .

இவ்வாண்டு நடக்கும் ஒலிம்பிக்போட்டி ஆயத்தங்கள் தொடர்பான விபரண நிகழ்ச்சி ஒன்றில் கொரிய MBC ஒளிபரப்புச்சேவை மேற்படி நிகழ்வை ஒத்த ஒன்றையும் ஒளிபரப்பியது. வெற்றிப்பதக்கங்களை தட்டுக்களில் ஏந்தியவாறு அழகிகள் வெற்றிப்பீடத்தை நோக்கி நளினமாக நடந்து செல்வதற்கு அவர்களின் தலையில் புத்தகம் ஒன்றை வைத்து மூவரையும் ஒரே மாதிரி புன்னகைக்க வைத்து நடை பழக்கினார்கள்!!

Coming மற்றும் sweet என்ற இரண்டு வார்த்தைகளை மட்டுமே கற்றுக்கொண்டு அந்தரேயும் யாக்கோலிஸீம் சமாளிப்பது மிகுந்த வேடிக்கை. மகளிற்கு மணமகன் தேடுவதற்காக விருந்தொன்றுக்கு ஏற்பாடு செய்கிறார் அந்தரே. அந்த விருந்துக்கு முக்கிய பிரமுகர்கள் பலரும் அழைக்கப்படுகின்றனர். குமார் பொன்னம்பலமும் மனைவியும் கூட இவ்விருந்துக்காட்சியில் தோன்றுகிறார்கள். விருந்தில் மகள் கற்றுக்கொண்ட ஆங்கிலத்தை தப்பு தப்பாக பிரயோகிப்பதும் அந்தரேயும் யாக்கோலிஸீம் Coming sweet ஐ மட்டுமே வைத்துக்கொண்டு சமாளிப்பதும் படுஜோர்.

விருந்தில் வெள்ளையரையும் காப்பிலியினரையும் கண்டு வெறுத்துப்போன அந்தரே தமது கிராமத்தை சேர்ந்த உறவுப்பையன் ஒருவனுக்கே மகளை மணமுடிக்க தீர்மானிக்கிறார். ஆனால் நாகரிக மோகமும் அந்தஸ்து மோகமும் கொண்ட தமக்கையாரை ஏமாற்றி எப்படி அக்கல்யாணத்தை நடத்தி வைக்கிறார் என்பதே க்ளைமாக்ஸ்.

ஜோய் அபேவிக்ரம அபாரமான நடிகர். தனது கிராமியப்பாத்திரத்தை உணர்ந்து அபாரமாக நடித்திருக்கிறார். மற்றைய நடிக நடிகையரும் மிக இயல்பாக பாத்திரத்துடன் ஒன்றிப்போய் நடித்திருக்கின்றனர்.

சிங்கள திரைப்பட உலகில் ஜக்சன் அன்ரனியும் புகழ்பெற்றவர். இவர் நடித்த படங்கள் பெரும்பாலும் கதையம்சம் மிக்க தரமான படங்களாகவிருக்கும். நான் பார்த்த சிங்களப்படங்களுள் அக்னிதாஹய, சூர்ய அரண, மில்லசொயா, ஆதரணிய வசும என்பன பாசாங்கற்ற தரமான படங்கள். இவை இந்திய ஹீரோயிஸ படங்களிலிருந்து மாறுபட்டவை. தென்இந்திய ஹிந்தி திரைப்படப்பாணிகளை தழுவியதாக தத்தக்கா பித்தக்கா என எடுக்கும் சிங்கள படங்களை பார்ப்பதற்கு பதிலாக ரீ.வி சீரியலுக்கு முன் உட்கார்ந்து அழுது கொண்டிருப்பது எவ்வளவோ மேல்.

சிங்கள தொலைக்காட்சி தொடர்களும் யதார்த்தமான கதையமைப்பைக் கொண்டவை. சமையலறையிலும் கூறைப்புடைவையில் நிற்காமல் யதார்த்தமான பாத்திரப்படைப்புகளைக்கொண்டவை. கிரஹணய, அசல கலவர, ஹிருட்ட முவாமன் போன்றவை சிங்கள மக்கள் மத்தியில் பிரபலமான தொலைக்காட்சித் தொடர்களாகும்.

இலங்கையிலுள்ள இனமோதல் காரணமாக தரமான சிங்களப்படங்களை பார்க்கும் வாய்ப்பு இல்லாமல் போவதும், திரைப்படங்களினூடாக இனவாதக்கருத்துக்களை சிங்கள இனவாதிகள் புகுத்த முயற்சிப்பதும் யதார்த்தமானதும் வருந்தக்கூடியதுமான விடயங்கள் ஆகும். அண்மையில் 'பிரபாகரன்' என்ற சிங்களத்திரைப்படம் பலத்த சர்ச்சைக்குள்ளானது இங்கு குறிப்பிடத்தக்கது.

7 comments:

M.Rishan Shareef said...

ஆஹா...
மிக அருமையான படமிது..

இன்னும் உலகவிருதுகள் பெற்ற நிறையச் சிங்களப் படங்கள் இருக்கின்றன.
பாருங்கள் நண்பரே.

தரமான கதையோட்டம்,நல்ல காட்சியமைப்பு,மேக் அப் இல்லாத நடிகர்களென அருமையாக இருந்த சிங்கள நாடகங்கள் தற்பொழுது யதார்த்தமற்ற கதைப்போக்குடன் கூடிய இந்திய நாடகங்களின் சாயலுடன் வருவது வருத்தத்துக்குரியது.

ஆ.கோகுலன் said...

வணக்கம் ரிஷான் ஷெரீப்,
நீங்களும் பார்த்து மகிழ்ந்திருப்பது மகிழ்ச்சி. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!

கானா பிரபா said...

கோகுலன்

தரமான திரைப்படமொன்றைப் பரிந்துரைத்தமைக்கு நன்றி. நானும் இங்கே உள்ள கடைகளில் இப்படியான சிங்களத்திரைப்படங்களைத் தேடி அலுத்தது தான் மிச்சம். தென்னிந்திய சினிமாவைப் பார்த்து அன்ன நடை நடந்த குப்பைகளே அதிகம் விற்பனையில் இருக்கின்றன.

கொழும்பில் ரொறோனா என்ற கடை கொள்ளுப்பிட்டியில் இருக்கிறது. அங்கே நாலைந்து தரமான சிங்களப்படங்களை வாங்கி வந்தேன்.

நீங்கள் சொன்ன இப்படத்தை இணையத்தில் பார்க்கலாமா?

ஆ.கோகுலன் said...

வணக்கம் கானாபிரபா,
இணையத்தில் தேடினேன் கிடைக்கவில்லை. நீங்கள் குறிப்பிட்ட ரொறானா நிறுவனம் வெளியிட்ட டி.வி.டி யில்தான்நானும் பார்த்தேன்.
அந்நிறுவனத்தின் இணையமுகவரி மற்றும் மின்னஞ்சல் - www.toranavideo.com - toranavm@sltnet.lk

கானா பிரபா said...

தகவலுக்கு நன்றி கோகுலன்

முரளிகண்ணன் said...

\\விருந்தில் வெள்ளையரையும் காப்பிலியினரையும் கண்டு வெறுத்துப்போன \\
காப்பிலியினர் என்றால் ?

ஆ.கோகுலன் said...

காப்பிலியர் என்று பொதுவாக கறுப்பர்களை..! (மிகவும் கறுப்பர்களை) சொல்வார்கள். :)
ஆபிரிக்தேசத்தவர், கறுப்பு அமெரிக்கர், மற்றும் நீக்ரோக்கள் இவ்வாறு பேச்சுவழக்கில் அழைக்கப்படுவார்கள்.
வருகைக்கு மிகவும் நன்றி முரளிகண்ணன்.