விபத்திலிருந்து தப்பியவள்
செய்தி கேட்டு
செத்துப்போனாள்
குண்டு வைத்தவன்
மகனாம்..!
கவிதை என்றால் என்ன என்பதற்கு எனக்கு இன்னும் சரியான பதில் தெரியவில்லை. மரபுக்கவிதைகளுக்கான இலக்கணங்கள் இறுக்கமாக இருந்தாலும் புதுக்கவிதைகள் சற்று சுதந்திரமானதாகவே படுகிறது. கவிதைக்கு சந்தம் (Rhyme) பிரதானமானது என்ற கருத்து முன்னர் இருந்து வந்தது. ஆனால் தற்போது எழுதப்படும் கவிதைகளின் சந்தங்கள் ஐயப்படக்கூடியதாகவே இருக்கின்றன. எனவே கவிதை என்பதற்கு 'வசீகரமான வரிகள்' என்று தற்காலத்தில் அர்த்தம் கற்பித்துக்கொள்ள முடியும். இது சாரப்படவே Lyrics என்ற பதம் பாவிக்கப்படுகிறது. இது சுகிர்தராணியின் வசீகரமான வரிகள்.. (இதனையும் இடம்பெறும் இன்னும் சில கவிதைகளையும் அறிமுகப்படுத்திய ஒக்சிஜன் சதீஷிற்கு நன்றிகள்..!)
இடமற்று நிற்கும்
கர்ப்பிணியின்
பார்வை தவிர்க்க
பேருந்துக்கு வெளியே
பார்ப்பதாய்
பாசாங்கு செய்யும் நீ
என்னிடம் எதை
எதிர்பார்க்கிறாய் காதலையா?
சில சதுர அடிகளே ஆன
எங்கள் ஒண்டுக்குடித்தனக் கவலை
மகளை தீண்டுவதில்லை
தனக்கான வீட்டை
அவள் வரைந்துகொள்கிறாள்.
வரைந்த வீட்டின்
வண்ணக்கலவை முகத்தில்
ஒளியாய் வழிய
தூங்கிப்போகிறாள்
சில பென்சில்களும்
கொஞ்ச நேரமும்
போதும் அவளுக்கு
வடிவங்கள் உயிர்பெற
ஒரு சமயம் வெகுநேரம் கழித்து
எழுந்தவள்
தன் வீட்டில் குழந்தை நண்பர்களுக்கு
விருந்து வைத்ததாகச் சொன்னாள்
அப்போது தேவன் வந்து போனாராம்
ஒரு மழை நாளில் வீடு வந்து சேர்ந்த
வெள்ளைப் பூனைக்குட்டியை விரட்டியபோது
அழுதுவிட்டாள்
தன் புதிய வரைபட வீட்டில்
அதற்கு ஒரு அறை ஒதுக்குவதாக
தூக்கி அணைத்துக்கொண்டாள்
குழந்தைகளின் உலகத்தில்
யாருக்குத்தான் இடமிருக்காமல் போகாது
இடி
இதயத்தில் தானே
இங்கே ஏன்
மழை..!
'பூக்களைப் பறிக்காதீர்கள்..'
என்கிறது எச்சரிக்கைப்பலகை - ஆனால்
புல் தரை எங்கிலும்
பூக்களின் சிதறல்
காற்றைக் கோபித்துக் கொள்ளாதீர்
பாவம் அதற்கு படிக்கத்தெரியாது..!
வெளியே குளிரில்
புல்லுக்கு மடடும்
வியர்த்தது எப்படி..!
ஏன் எம் வாழ்வில் இத்தனை சுமைகள்
ஏன் எம் பாதையில் இத்தனை இருட்டு
குட்டப்பட்டு தலை குனிந்த அகதிகளாய்
ஏன் எங்களுக்கு இவ்விதம் எழுத்து
ஏன் எம் நெஞ்சில் இத்தனை நெருப்பு
பூவார் வசந்த மரங்களின் மறைப்பில்
காதற்பெண்களின் தாவணி விலக்கி
அபினி மலர்களின் மொட்டை சுவைக்கும்
இளம் பருவத்தில்
இடுகாட்டு மண்ணை சுவை என்று எமது
இளையவருக்கு விதித்தவர் யாரோ..?
நாட்டுப்புற பாடல்கள்கூட போகிறபோக்கில் மனதை அள்ளக்கூடியன. பாசாங்கற்ற நிர்ச்சலமான வரிகளே அவற்றின் பலம்.
கந்தனைக் காணவென
கார்த்திகைக்கு வந்தேனடி..
உந்தனைக் கண்டேன் - இனி
ஊருக்குப்போகமாட்டேன்..!
நக்கல் நளினங்கள் கூட கவிதைகளில் குறைவில்லை. மஹாகவியின் குறும்பா ஒன்று..
சொந்தத்தில் கார்; கொழும்பில் காணி
சோக்கான வீடு; வயல் கேணி
இந்தளவும் கொண்டு வரின்
இக்கணமே வாணியின் பால்
சிந்தை இழப்பான் தண்டபாணி..!
ஊர் எல்லையோர
ஐயனாரின் கத்தி
வாங்கித்தான்
பென்சில் சீவலாமா..?
//
பெண்
இடையும் இறைவனும்
ஒன்றுதான் -அவை
இருந்தும் தெரிவதேயில்லை..
வாசல் பெருக்கிப் போனாள்
சுத்தமானது வாசல்
குப்பையானது மனசு..!
இது யாழ்ப்பாணத்தில் கேள்விப்பட்டது..
நாலாம் பிறை பார்த்தால்
நாய்படாப் பாடென்பார்
நானோ முழு நிலவை
பார்த்து விட்டு
அனு தினமும்
அலைகின்றேன்.
விருந்தாளி பையில் திராட்சை
நீண்ட நேர பேச்சு
உறங்கிப் போன குழந்தை.
காவியத்தாயின் இளையமகன்
காதல் பெண்களின் பெருந்தலைவன்
பாமரஜாதியின் தனிமனிதன் - நான்
படைப்பதால் என் பெயர் இறைவன்.
அந்தக் குண்டின் சுற்றளவு
வெறும் முப்பது சென்டிமீட்டர்தான்.
வெடிதத பொழுது
அதன் வீரியம்
மையத்திலிருந்து
ஏறத்தாழ ஏழு மீட்டர்தான்.
இந்த வட்டத்துள்,
இறந்து கிடந்தவர்கள் எட்டு
காயமடைந்தவர்கள் பன்னிரெண்டு.
இவர்களைச் சுற்றி,
நெஞ்சைப் பிளக்கும் சோகத்தாலும்
நிர்ணயமற்ற காலத்தாலுமான
ஒரு பெரிய வட்டத்துள்,
இரண்டு ஆஸ்பத்திரிகள்
ஒரு சுடுகாடு.
நூற்றுச்சொச்சம் கிலோமீட்டர் தள்ளி,
சொந்த ஊரில் புதைக்கப்பட்ட
அந்த இளம் பெண்ணையும்
கணக்கில் கொண்டால்
கணிசமாக விரிவடையும்
மற்றொரு வட்டம்.
கடல்களுக்கப்பால்எங்கோ ஓர் மூலையில்,
இவளுக்காய் கண்ணீர் விட்டுக்கொண்டிருக்கும்
அந்த ஒற்றை மனிதனால்
உலகளவாய் உருமாறும் இன்னொரு வட்டம்.
சொர்க்கத்தில் இருப்பதாக சொல்லப்படும்
கடவுளின் கதவு வரை சென்று
அவல ஓலமிடும்,
அநாதையாக்கப்பட்ட
அந்த குழந்தையின் அழுகுரல் போடும்,
அண்டங்களை கடந்த -
கடவுளும்
கணக்குகளுமில்லாதவேறொரு வட்டத்தை பற்றி
நான் சொல்லப் போவதில்லை
18 comments:
நல்ல பதிவு கோகுலன்.
கவிதைகள் பற்றிய வரைமுறைகளில் எனக்கும் குழப்பம்தான்.ஆனாலும் நீங்கள் குறிப்பிட்டது போல சில கவிதைகள் மனதை ஆட்கொண்டு விடுகின்றன.உங்கள் பார்வையும், தெரிவுகளும் விளக்கங்களும் அருமையாக உள்ளன.
உங்களது மற்றைய பதிவுகளையும் பார்த்தேன். எழுதுவதில் அழகும், நேர்த்தியும், வித்தியாசமான சிந்தனைகளும் தெரிகிறது. தொடர்ந்தும் எழுதுங்கள்.
வாழ்த்துக்கள்.
நட்புடன்
சந்திரவதனா
மிக்க நன்றி திருமதி.சந்திரவதனா. உங்களைப்போன்ற வலையுலகில் மூத்த பதிவரிடம் பாராட்டுப் பெறுவது எனக்கும் மிக்க மகிழ்ச்சி.
அருமையான பதிவு கோகுலன்!!!
நன்றி, நன்றி.. ஜில் ஜில்!
கவிதை பிடிக்காதுன்னு சொல்லி சொல்லி இவ்வளோ நல்ல நல்ல கவிதைகளை எடுத்துப் போட்டு இருக்கீங்க அருமை.....
அன்புடன் அருணா
வாருங்கள் அருணா..!
அச்சச்சோ.. கவிதை பிடிக்காதென்று சொல்லவில்லை. கவிதை என்ற பெயரிலான இம்சை தான் பிடிப்பதில்லை.
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
நெடுநாளைக்கு பிறகு நல்ல கவிதைகளுடன் கூடிய பதிவொன்றை வாசித்து இருக்கின்றேன். உண்மையில் இப்படியொரு பதிவையிட்டதற்கு உங்களை பாராட்டத்தான் வேண்டும்.
வாங்கோ கோசலன்,
வாவ்.. இருவருக்கும் ஒரு எழுத்துதான் வித்தியாசம்!!.
கானாபிரபா கூட ஒரு பின்னூட்டத்தில் கோசலன் என்றே விளித்தார்..! :)
தங்கள் பாராட்டிற்கு மிக்க நன்றி.
அத்தனை
கவிதையும்
அருமை
வருக திகழ்மிளிர், மிக்க நன்றி கருத்துக்கு.
உங்கள் பெயர்கூட அருமை. இரண்டு வினைச்சொற்கள் சேர்ந்த ஒரு பெயர்ச்சொல்..!! :)
கோகுலன்,
நல்ல பதிவு. 'திகழ்மிளிர்' என்ற பெயரின் வசீகரத்தில் இருந்தேனே ஒழிய இவ்வளவு அழகாக அதைப் பிரித்துப் பார்க்கத் தோன்றவில்லை. எல்லாக் கவிதையும் நல்ல தேர்வு எனினும், 'உறங்கிப் போன குழந்தை' அருமை. வாழ்த்துக்கள்.
அனுஜன்யா
வருக அனுஜன்யா!
பகிர்விற்கும் வாழ்த்திற்கும் மிகவும் நன்றி.
கவிதையை பற்றிய சொல்லாடல்களை எங்கள் அண்ணாச்சி எலக்கிய பேராளுமை ஆசிப் மீரான் ரொம்ப நல்லா மொக்க போட்டிருக்காரு. படிச்சிருக்கீங்களா ;))
படித்ததில்லையே சென்ஷி. இணைப்பையும் குறிப்பிட்டிருந்தால் உதவியாகஇருக்கும். எனினும் தகவலுக்கு மிக்க நன்றி.
அருமையான கவிதைகள்....
வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி ச்சின்னப்பையன்..!
தங்களின் பதிவு சிறப்பானது. ஏன் இப்போது எழுதுவதில்லை?.
நன்றி சர்வேஷ்..
நேரப்பற்றாக்குறைதான்..
எழுத முயற்சிக்கிறேன்..
Post a Comment