Wednesday, March 5, 2008

தேவை

கொஞ்சம் திகைத்துத்தான் போனேன் அந்த எலியின் வேலையைக்கண்டு। சென்ற வாரம் சமையலறையில் எலியொன்றின் நடமாட்டத்திற்கான அறிகுறிகளைக்கண்டு எப்படி வந்திருக்கக்கூடும் எனத்தேடியதில் அலுமாரியின் பின்புறம் நிலத்தின்மட்டத்துடன் சுவரில் ஒரு ஓட்டை இருந்தது தெரிந்தது। முன்னர் குழாய் ஏதேனும் பொருத்துவதற்கான ஓட்டையாக இருக்கும் என்றெண்ணி அதை அடைத்து விட்டேன்। நேற்று குழாயை திறந்ததும் காலடியில் தண்ணீர் சளசளக்கவே, ஆராய்ந்ததில் பேசினையும் சாக்கடை குழாயையும் இணைக்கும் இறப்பர் குழாய் எலியால் சின்னாபின்னமாயிருந்தது। ஆச்சரியமாகத்தான் இருந்தது. ஏனெனில் மூன்று அங்குலம் விட்டமுடைய சாக்கடைக்குழாய் சமையலறையிலிருந்து வெளியில் பலமீற்றர் தூரம் நீண்டுபோய் நகரசபை வடிகாலை அடைகின்றது। உறையவைக்கும் இந்த குளிர்காலத்தில் (Winter) சாக்கடைக்குழாயின் மறுஅந்தத்தை கண்டுபிடித்து திரும்பவும் சமையலறைக்கு வரவேண்டிய அளவிற்கு அந்த எலியின் 'தேவை' அதற்குப்பிரதானமாயிருந்திருக்கிறது।


எலிமட்டுமல்ல பொதுவாக எந்த உயிரினமோ அல்லது எந்த இனமோ, அமைப்போ, நிறுவனமோ, கட்சியோ, நாடோ தனது தேவையை நிறைவேற்றிக்கொள்வதற்கு பின்னிற்பதில்லை. தேவையை நிறைவேற்றிக்கொள்வதற்காக எந்தப்பிரயத்தனம் செய்யவும் தயாராகவே இருக்கின்றன. ஏனெனில் அவர்களது அல்லது அவைகளது தேவை அப்படிப்பட்டது. தேவை ஒன்றை நிறைவேற்றிக்கொள்வதற்காகவே அவை இயங்குகின்றன. மயில் ஆடுவதும் காகம் கரைவதும் கூட அதனதன் தேவை கருதித்தான். சூரிய சந்திர இயக்கம்கூட தேவையின்பாற்பட்டதே.

இங்கிலாந்தில் கைத்தொழில் புரட்சியை அடுத்து தேவைகள் அதிகரித்ததன் காரணமாக பலவிதமான உபகரணங்களும் கனியங்களும் கண்டுபிடிக்கப்பட்டன. மூலப்பொருட்களை தொழிற்சாலைகளுக்கு கொண்டு செல்லவும் முடிவுப்பொருட்களை துறைமுகங்களுக்கு விரைவாகக்கொண்டு போய்ச்சேர்க்கவும் தண்டவாளங்களில் ஓடும் புகையிரதங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அதன் வேகம் குறித்தான தேவை இன்று புல்லட் இரயில் வரை கொண்டுவந்து விட்டிருக்கிறது. நாடுகாண் பயணங்களின் நிறைவில் நாடுகளிற்கிடையிலான விரைவான போக்குவரத்து மார்க்கம் ஒன்று தேவைப்பட்டது. பறவைகள் இலகுவாக இடத்துக்கிடம் செல்வதைப்பார்த்து விமானம் கண்டுபிடிக்கப்பட்டது.அதன் வேகம் குறித்தான தேவை இன்று மிகையொலி விமானம் வரை கொண்டுவந்து விட்டிருக்கிறது.



இரண்டாம் உலகப்போரின் பின் ஏற்பட்ட புதியஉலக ஒழுங்கின் தேவையின் நிமித்தம் ஐக்கியநாடுகள் சபை தாபிக்கப்பட்டது. ஐக்கியநாடுகள் சபையில் பலமிக்கநாடாக விளங்கவேண்டும் அல்லது காட்டவேண்டும் என்ற தேவையில் புதிய புதிய ஏவுகணைப் பரிசோதனைகளும் அணுகுண்டுப்பரிசோதனைகளும் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன.


அணுகுண்டுப்பெருக்கத்தினால் பூமியில் உள்ளவர்கள் அனைவரும் அழிந்துபோகச் சாத்தியம் உள்ளதனால் பிறகிரகங்களில் மனிதன் குடியேற சாத்தியம் உள்ளதா எனும் ஆராயும்தேவையில் தற்போது செவ்வாய்கிரகம் ஆராயப்பட்டுக்கொண்டிருக்கிறது. இதில் விண்கலங்களும் செய்மதிகளும் சம்பந்தப்பட்டிருப்பதால் அவற்றை விண்ணிலேயே தாக்கியழிப்பதற்கான தேவையும் தற்போது புதிதாக ஏற்பட்டிருக்கிறது. இது விண்வெளிப்போட்டி எனப்படுகின்றது. அண்மையில் சீனாவும் இதில் இணைந்து கொண்டுள்ளது.


இவ்வாறாக தேவைகள் ஏற்படும்போதெல்லாம் அத்தேவைகள் ஏதோ ஒரு வகையில் நிறைவேற்றியே தீர்க்கப்படுகின்றது. தேவை ஒன்று தீர்க்கப்படுவதற்கு தேவையின்பால் காட்டப்படும் கரிசனம், அத்தேவையை பூர்த்திசெய்து கொள்வதற்கான அர்ப்பணிப்பு என்பன பிரதான இடம் வகிக்கின்றன. எனவே பலமான தேவை ஒன்று இருக்குமாயின் அது நிறைவேறுவதற்கு உரித்துடையது.


அப்படியாயின் இலங்கையில் ஏன் இன்னமும் சமாதானம் ஏற்படவில்லை. இலங்கையில் சமாதானம் குறித்ததேவை இல்லையா எனக்கேட்டால் இல்லை என்றே சொல்ல வேண்டும். ஆயுத உற்பத்திநாடுகள் தமது ஆயுதங்களை விற்பனை செய்வதற்கும் அவ்வாயுதங்களின் திறன் குறித்துப்பரிசோதிப்பதற்கும்; குழம்பிப்போன நாடொன்றிலேயே உதவிஎன்ற பெயரில் மூக்கை நீட்டலாம் என நினைக்கும் வல்லரசு நாடுகளிற்கும்; யுத்தத்தைக்காரணம் காட்டி தமது ஊழல்மோசடிகளை மறைக்கநினைக்கும் அரசியல்வாதிகளுக்கும்; தனது வாக்கு வங்கிக்கு இனவாதக்கருத்துக்களையே நம்பியிருக்கும் கட்சிகளுக்கும் இலங்கையில் சமாதானம் என்பது தேவையில்லை. இவர்கள் மட்டுமா இப்படி? சமாதானம் வந்தால் - நிவாரணம் நின்றுபோகும் என நினைக்கும் அகதிமுகாம் சோம்பேறிகளிற்கும், யுத்தத்தை காட்டி கொழும்புக்கு இடமாற்றம் பெற்ற அரசஊழியரிற்கும், சமாதானம் வந்தால் திருப்பியனுப்பப்படுவோமே என நினைக்கும் அகதி புலம்பெயர்வாழர்களிற்கும், வியாபாரிகளிற்கும் இலங்கையில் சமாதானம் தேவையில்லை. மொத்த சனத்தொகையில் இப்படியானவர்கள் எத்தனை சதவீதம் என்பதிலேயே இலங்கையின் சமாதானம் குறித்தான தேவை தங்கியுள்ளது. ஏனெனில் காத்திரமான தேவை எதுவும் பூர்த்திசெய்யப்பட வேண்டியது நியதியாகும்.


'சமாதானத்தில் தீவிரவிருப்பம் கொண்ட நூறுபேராவது துணிந்து குரல்கொடுத்து சமாதானத்தின் தேவையை முன்வைத்தால் மாற்றத்தைக்கொண்டுவர முடியும்' என கலாநிதி. குமார் ரூபசிங்க சென்ற திங்கட்கிழமை கொழும்பில் நடைபெற்ற 'சமாதானத்திற்கான ஒரு குரல்' என்ற தனது புத்தக வெளியீட்டு விழாவில் கூறியிருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.

No comments: