Tuesday, July 22, 2008

தென்கிழக்காசிய வேங்கை - தென்கொரியா - 02

தென்கொரியா பெளத்தமதம் சார்ந்த நாடாக இருந்தபோதும் 46 வீதத்திற்கும் கூடுதலானவர்கள் எந்தமதத்தையும் சாராதவர்களாகவே இருக்கிறார்கள். விண்ணப்பப்படிவங்களில் கூட 'எந்த மதத்தையும் சாராதவர்..' என்ற தெரிவும் தரப்பட்டிருக்கும்.



30 வீதமானவர்கள் பெளத்தர்களாகவும் 15 வீதமானவர்கள் கிறிஸ்தவர்களாகவும் இருக்கிறார்கள். 50000 பேர்வரை முஸ்லிம்களாகவும் இருக்கிறார்கள்.
(படம் - கொரிய மயானம்)
மதநிகழ்வுகளில் மக்கள் பங்களிப்பு குறைவாக இருக்கும். வெசாக்குடன் வரும் ஊர்வலத்தில் இலங்கை பெரஹராவை ஒத்தஊர்வலங்கள் நடைபெறும்.

அரசியல் குறித்தும் பெரும்பாலானவர்கள் அலட்டிக்கொள்வதில்லை. அதற்கு அவர்களுக்கு நேரமும் இருப்பதில்லை. தற்போதய ஜனாதிபதி திரு.லீ மியுன் பக் அவர்கள் வேட்பாளராக இருந்தபோது கொரியாவின் ஹீண்டாய் நிறுவன ஊழல் வழக்கொன்றில் சம்பந்தப்பட்டிருந்தார். ஆனால் அதையும் மீறி மக்களால் அவர் தெரிவுசெய்யப்பட்டார். அதன்பின்னர் நீதிமன்றம் அந்த வழக்குகளில் இருந்து அவரை விடுவித்தது.



தேர்தல் பிரச்சாரங்கள் அமைதியாகவும் நாசூக்கான முறையிலும் செய்யப்படும்.
(படம்- வீதியோரத்தில் தேர்தல் பிரசாரம்)
பொதுவாக மேடையுடன் கூடிய வாகனம் ஒன்றில் வேட்பாளர் மக்கள்கூடும் சந்திகளில் உரையாற்றும்போது சீருடையணிந்த பெண்கள் அவருக்கு ஆதரவாக கோஷமிடுவார்கள். சுவரொட்டிகள் மற்றும் பதாதைகள் நகரசபையால் ஒதுக்கப்பட்ட இடங்களில் மட்டுமே காட்சிப்படுத்தப்படும்.



கொரியர்களின் பாரம்பரிய உடை யப்பானியர்களின் கிமோனோ உடையை சிறிதளவு ஒத்தது. ஆயினும் இவ்வாறு பாரம்பரிய உடைகளை அணிபவர்களின் எண்ணிக்கை மிகக்குறைவு என்று சொல்லலாம். இளைய தலைமுறையினர் பெரும்பாலும் அமெரிக்கபாணியிலான நாகரிகங்களிலேயே ஆர்வம் காட்டுகிறார்கள்.
(படம் - கொரிய பாரம்பரிய உடை)




கொரியாவில் சாதாரணமாக விருந்துகளும் கதிரையில் இருக்காமல் நிலத்தில் தலையணை போன்ற திண்டின்மீது உட்கார்ந்தே விருந்து உண்பார்கள். விருந்தில் மதுவும் மாமிசமும் பிரதானமானது.
(படம் - கொரிய விருந்து)




போர் ஒரு முடிவுக்கு வந்தாலும் எல்லையில்காணப்படும் பதற்றத்தை காரணம்காட்டி அமெரிக்கத்துருப்பினர் 24000 வரையானவர்கள் தற்போதும் கொரியாவில் தங்கியிருந்து கொரியஇராணுவத்துக்கு உதவிவருகின்றனர். இதனால் கொரியா பல சங்கடங்களுக்கும் நிபந்தனைக்கும் ஆளாகிவருகிறது.

அமெரிக்க இராணுவத்தினருக்கென நெற்காணிகள் சுவீகரிக்கப்பட்டன. உள்ளுர் சந்தைவிலைகளைவிடவும் குறைவான விலையில் மாட்டிறைச்சியும் அரிசியும் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றது.



அரசின் இவ்வாறான நடவடிக்கைகளுக்கு எதிராக மக்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.
(படம் - 18ம் நூற்றாண்டு அரச அரண்மனை)
அண்மையில் அரசால் சுவீகரிக்கப்பட்ட தனது காணிக்கு நட்டஈடு கிடைக்காததால் வெகுண்ட வயோதிபர் ஒருவர் புராதன மேற்குவாயில் என்று அழைக்கப்டும் வரலாற்று மரக்கட்டடம் ஒன்றிற்கு தீவைத்து அக்கட்டடம் முழுமையாக எரிந்து நாசமானது.



கோடை, மழை, குளிர், வசந்தம் என்ற நான்கு காலநிலைகள் காணப்படுகின்றன. குளிர்காலமே இதில் அதிகம். கடும்குளிர் காரணமாக பொலிதீன் கூடாரங்களுக்குள்ளேயே பயிர்ச்செய்கை நடைபெறுகிறது. கோடைகாலத்தில் நெல்விதைப்பு இடம்பெறும். ஒப்பீட்டளவில் விவசாயிகள் வருமானம் குறைந்தவர்களாகவே இருக்கிறார்கள்.




தலைநகரம் சோலில் (Seoul) பார்க்கவேண்டிய இடங்களாக பல நிறுவப்பட்டுள்ளன. கடல் மட்டத்திலிருந்து 365மீற்றர் உயரமான சோல் ரவரிலிருந்து சோலை நாலாபக்கமும் தொலைநோக்கிமூலமும் கண்டுகளிக்கலாம். மலைஒன்றில் அமைக்கப்பட்டுள்ள இந்த கோபுரத்தின் அடிப்பகுதிக்கு கேபிள் கார் மூலம் செல்லலாம்.



இந்த கோபுரத்தின் அடிவாரத்தில் காதலர்களின் பெயர்கள் எழுதிய பூட்டுக்களை பூட்டி விட்டால் காதலர்கள் பிரியாமல் இணைந்திருப்பார்கள் என்று நம்புகிறார்கள்.

டிஸ்னிலாண்ட் ஐ ஒத்த Lotteworld. Seoul land, Dream land, Everland என்று பல கேளிக்கை பூங்காக்கள் உள்ளன.


Coex Aquarium மற்றும் 63city என்பவற்றில் கடல்வாழ் உயிரினங்களை நேரடியாக இராட்சதநீர்த்தொட்டி குகைகளில் காணமுடியும். தலைநநகரின் மத்தியில்ஓடும் ஆறான Han river என்பதில் 'ஜொய்னாறு' எனுமிடத்தில் கேளிக்கை படகுசவாரி செய்வதனூடாக இரவில் சோலின் அழகை இரசிக்க முடிவது இனிமையான அனுபவம்.



கோடைகாலத்தில் புகழ்பெற்ற கடற்கரையாக 'ஹியுந்தே' கடற்கரை விளங்குகிறது. இது பூசான் எனுமிடத்தில் தலைநகரிலிருந்து ஆறுமணிநேர பயணதொலைவில் உள்ளது. இவற்றை தவிர கொரிய கலைகலாசாரத்தை விளக்கும் நூதனசாலைகளும் தாவர மற்றும் மிருக காட்சிசாலைகளும் உல்லாசப்பயணிகளை கவருமிடங்களாக உள்ளன.

Yongsan, Technomart என்பவை பெரிய இலத்திரனியல் வர்த்தக நிலையங்களாகவும் Dongdamun, Namdamun என்பவை பிரத்தியேகமாக வெளிநாட்டினரை கவரும் பிரபல சந்தைகளாகவும் விளங்குகின்றன.


சோல் நகரசபையினர் பிரகடனப்படுத்திய 'Hi Seoul..! - Soul of Asia' என்ற மகுடவாக்கியம் இங்கு குறிப்பிடத்தக்கது.

Tuesday, July 8, 2008

தென்கிழக்காசிய வேங்கை - தென்கொரியா - 01

கொரியா வரும்போதே நான் பயந்துகொண்டே வந்தது கொரிய உணவுகளை எண்ணித்தான். நாய் இறைச்சியும் சாப்பிடுவார்கள் என்று இலங்கையில் பயமுறுத்தியிருந்தார்கள். இங்கு வந்ததும் அது உறுதியாகிவிட்டதுமல்லாமல் வந்த இரண்டு மாதத்திலேயே அதில் ஒரு துண்டும் தவறுதலாக வாய்க்குள் போய்விட்டது.

கொரியமொழியில் 'கோகி' (Kogi) என்பது இறைச்சியை குறிக்கும். தக்கோகி - கோழியிறைச்சி, தேஜிகோகி - பன்றி இறைச்சி, கேகோகி - நாய் இறைச்சி. இதில் நான் உண்பது தக்கோகி மட்டுமே. ஆரம்பத்தில் கொரியமொழியில் எதைச்சொன்னாலும் உச்சரிப்பை விளங்கிக்கொள்ளுவதில் சிக்கல் இருந்தது.

இலங்கையில் அலுவலக கோப்புகள் மற்றும் கடிதங்களில் என்னை சுருக்கமாக விளிப்பது Mr.K. என்று.. ஆனால் கொரிய மொழியில் 'கே' என்பது நாயைக்குறித்ததால் விதியின் கொடுமையையும் நொந்துகொள்ள வேண்டியிருந்தது.

எமது நாட்டில் கோழிகளை வீட்டில் வளர்ப்பது போல இவ்விடம் நாய்களை இறைச்சி மற்றும் வளர்ப்பு நோக்கங்களுடன் வளர்க்கிறார்கள். நாய்ப்பண்ணைகள் கூட இருக்கின்றன. வீதியோரங்களில் இருக்கும் நாய்ப்பண்ணைகளிலிருந்து இரவுநேரத்தில் நூற்றுக்கணக்கான நாய்கள் கோரசாக குரைப்பது திகிலாக இருக்கும்.


கொரிய உணவில் பிரதான இடம் வகிப்பது 'கிம்ஜி' என்ற உணவு. Secret of our energy என்று கொரியர்கள் சொல்லுமளவுக்கு எல்லோரும் எல்லா வேளைகளிலும் சாப்பிடும் ஒரு ஆகாரம் அது.

'பெச்சு' என்று சொல்லப்படும் முட்டைக்கோஸ் போன்ற அடுக்கான இலைகளுக்குள் உப்பு, சீனி, மிளகாய் தூள், மிளகுத்தூள், நசுக்கிய வெள்ளைப்பூண்டு மற்றும் பெயர்தெரியாத வஸ்துக்களெல்லாம் போட்டு மரப்பானைகளுக்குள் போட்டு வீட்டுக்கு வெளியில் வைப்பார்கள்.

பின்னர் சில மாதங்கள் கழித்து!! மரப்பானைக்குள் இருப்பதை துண்டுகளாக்கி சோறுடன் (பப்) உண்பார்கள். இப்போது கிம்ஜியின் நாற்றம் எப்பிடி இருக்கும் என்பதை நீங்களே கற்பனை செய்து கொள்ளலாம்.

ஆசிய நாடென்றபோதிலும் தெற்காசிய உணவுமுறைகளிலிருந்து கொரிய உணவுவகைகள் இவ்வளவு தூரம் வேறுபடுவது வேறு ஒரு கிரகத்துக்கு வந்த உணர்வையே தந்தது.


5000 ஆண்டு பழைமைவாய்ந்த கொரியா இரண்டாம் உலக யுத்தத்திற்கு முன்னர் யப்பானால் ஆக்கிரமிக்கப்ட்டு பலத்த அடக்கு முறைக்கு ஆளாகியது. ஒரு லட்சம் பேர் பலவந்தமாக யப்பானிய இராணுவத்துக்கு சேர்க்கப்பட்டார்கள்.

மேலும் கொரியர்களின் பெயர்கள் கூட யப்பானிய முறையிலேயே வைக்கவேண்டும் என்று கட்டளையிட்டதுடன் பெருமளவிலான பொருளாதார சுரண்டல்களும் (குறிப்பாக கடல்வளங்கள்) யப்பானால் மேற்கொள்ளப்பட்டது. அத்துடன் கொரியப்பெண்கள் மீதும் வன்முறைகள் மேற்கொள்ளப்பட்டன. இதனால் இன்றும்கூட கொரியர்கள் யப்பானை வெறுப்பவர்களாகவே காணப்படுவதுடன் யப்பானிய உற்பத்திப்பொருள்களையும் நிராகரிக்கின்றனர்.

இரண்டாம் உலகமகாயுத்த முடிவில் யப்பான் அமெரிக்காவிடம் சரணடைந்ததால் கொரியாவின் ஒரு பகுதியை அமெரிக்காவும் இன்னொரு பகுதியை ரஷ்யாவும் ஆதிக்கம் செலுத்தின. இதனால் ரஷ்ய கொம்யூனிசம் சார்ந்த பகுதி வடகொரியா என்றும் அமெரிக்க முதலாளித்துவ கொள்கை கொண்ட பகுதி தென்கொரியா என்றும் 1950 - 1953 வரை நடந்த போரின்பின் எல்லைகள் வகுத்து பிரிக்கப்பட்டது.

போரின்போது வடகொரியாவுக்கு சோவியத் ஒன்றியமும் சீனாவும் ஆதரவளிக்க தென்கொரியாவுக்கு அமெரிக்கா ஆதரவளித்தது. இலட்சக்கணக்கானவர்கள் போரின்போது மாண்டார்கள். கடல்தாவரங்களை காயவைத்து உண்ணும் அளவுக்கு வறுமைதாண்டவமாடியது.

போர்பற்றி ஒரு கொரிய வயோதிபர் சொல்லும்போது 'அமெரிக்க இயந்திர துப்பாக்கிகளுக்கு முன்னால் கொத்து கொத்தாக சீன இராணுவத்தினர் மடிந்தபோதும் அவர்கள் வெறும் கட்டுத்துப்பாக்கி (shot gun) ஐ வைத்துக்கொண்டு அலை அலையாக வந்தார்கள் என்று சீன இராணுவத்தின் ஆட்தொகையும் அர்ப்பணிப்பும் பற்றி குறிப்பிடுகின்றார்.

போரின்கொடுமையால் இரண்டு கொரியாவுமே வறுமையடைந்தன. 1953 தொடக்கம் 1958 காலப்பகுதிகளில் தென்கொரியா அமெரிக்காவிடமிருந்து வருடாந்தம் 27 கோடி டொலர் பெறுமதியான உதவிகளை பெற்றுவந்தது. இது அக்காலப்பகுதி மொத்ததேசிய உற்பத்தியின் 15 வீதமாகும்.

(தென்கொரிய பாராளுமன்றம்)

1960 ஆம் ஆண்டு தென்கொரியாவின் மொத்ததேசிய வருமானம் சூடான் நாட்டு வருமானத்துக்கு சமமானதாக இருந்தது. அதன் பின்னர் இராணுவ தலைவர்களே ஆட்சி செய்தாலும் உலகயுத்தத்தின் பின்னர் ஏற்பட்ட உலகமயமாக்கலுக்கு ஏற்றவகையில் பொருளாதார கொள்கைகளை வளர்த்துக்கொண்டதன் காரணமாகவும் புவியியல் அரசியல் காரணங்களாலும் தென்கொரியாவுக்கு அமெரிக்க பிரித்தானிய உதவிகள் தாராளமாகக்கிடைக்க மாறிவந்த உலக ஒழுங்கில் தன்னை இணைத்துக்கொண்டு கொரியா வேகமாக முன்னேறியது.

இன்று உலகின் முதல்பத்து ஏற்றுமதி நாடுகளுக்குள் கொரியாவும் அடங்குகிறது. கொரிய நாணயமான 'வொன்' (won) உலகின் பன்னிரண்டாவது இடத்தைப்பிடித்துள்ளது.. மோட்டார்வாகன ஏற்றுமதியில் உலகின் ஐந்தாவது இடத்தை ஹீண்டாய் (Hyundai) மற்றும் கியா (Kia) நிறுவனங்கள் தக்கவைத்துள்ளன.

இது தவிர இலத்திரனியல், பொறியியல், கட்டடவியல், வேதியியல், உயிர்நுட்பவியல் போன்றவற்றிலும் இன்று முன்னணி பெற்று விளங்குகிறது. இலத்திரனியலில் லிதியம் கிறிஸ்ரல் டிஸ்பிளே (LCD) மற்றும் செல்லிடப்பேசி கணனி தொழிநுட்பத்தில் உலகின் முன்னணி நிபுணத்துவ நாடாகவும் மிளிர்கிறது.

(கொரியதலைநகரம் சோலின் [Seoul] ஒரு பகுதி )

யப்பானுடன் தென்கொரியா, தைவான், சிங்கப்பூர், ஹொங்ஹொங் ஆகியவை தென்கிழக்காசியாவின் நான்கு வேங்கைகள் என்று அழைக்கப்படுகின்றன. இந்நாடுகளின் பொருளாதார வளர்ச்சியை ஒரு 'அற்புதம்' (miracle) என்று வர்ணிக்கிறார்கள்.

தென்கிழக்காசியாவில் பசுபிக் சமுத்திரத்தில் கொரியாவிற்கு இருந்த புவியியல் அரசியல் பொருளியல் சந்தர்ப்பங்கள் யாவும் தெற்காசியாவில் இந்து சமுத்திரத்தில் இலங்கைக்கு இருந்தும் தொடர்ந்து வரும் இனமோதல்களால் இலங்கை அச்சந்தர்ப்பங்களை தவறவிட்டு வறுமையில் உழன்று கொண்டிருப்பது துரதிர்ஷ்டவசமானது.

பதிவு நீண்டுவிட்டதால் கொரிய கலாசாரம் மற்றும் பல விடயங்களை அடுத்த பதிவில் தருகிறேன்.